பாராளுமன்றத்தில் பலாத்காரமாக அழுத்தி கதைப்பதன் மூலம் மாத்திரம் தீர்த்துக் கொள்ள முடியாது : தமிழ், முஸ்லிம் மக்கள், அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நிரந்தர தீர்வு காண வேண்டும் - ரவூப் ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 5, 2025

பாராளுமன்றத்தில் பலாத்காரமாக அழுத்தி கதைப்பதன் மூலம் மாத்திரம் தீர்த்துக் கொள்ள முடியாது : தமிழ், முஸ்லிம் மக்கள், அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நிரந்தர தீர்வு காண வேண்டும் - ரவூப் ஹக்கீம்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பலாத்காரமாக அழுத்தி கதைப்பதன் மூலம் மாத்திரம் தீர்த்துக் கொள்ள முடியாது. மாறாக தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றாக அமர்ந்து, அரசாங்கத்தின் அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடி இதற்கு நிரந்தர தீர்வொன்றை காண வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (4) நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களும் பலரும் இது தொடர்பாக சபையிலும் சபைக்கு வெளியிலும் பல தடவைகள் கதைத்திருக்கின்றனர். இந்த பிரதேச செயலகம் விவகாரத்தில் 90 களில் அமைச்சரவை அனுமதி கொடுக்கப்பட்டது. ஏன் இதுவரை செய்யப்படவில்லை. 35 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த விடாமல் அரசியல்வாதிகள் தலையீடு செய்கிறார்கள். அதனால் இது இடம்பெறுவதில்லை என்றெல்லாம் குறை கூறப்படுகிறது.

உண்மைக்கு புறம்பான இந்த விடயம் தொடர்பில் இதன் உண்மைத் தன்மை தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் தமிழ் அரசுக் கட்சியினரும் பல தடவைகள் எங்களுக்குள் கலந்துரையாடி தீர்த்துக் கொள்ள முயற்சித்திருக்கிறோம்.

இது ஒரு எல்லை பிரச்சினை சம்பந்தமான விவகாரம் மாத்திரமல்ல, 29 கிராம சேவகர் பிரிவுகள் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஊடாக வருகின்றபோதும் அதே அளவிலான பிரதேச செயலக பிரிவுகள் முஸ்லிம் பிரிவுகளிலும் அடங்குகிறது.

ஆனால் 29 கிராம சேவகர் பிரிவுகள் தலா இருக்கத்தக்கதாக 70 சதவீதமான நிலப்பரப்பு இந்த தமிழ் பிரதேச செயலகத்துக்குள் இருக்கின்ற காரணத்தினால்தான் பாரிய எதிர்ப்புக்கள் அந்த பிரதேசத்து முஸ்லிம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

இது தொடர்பில் ஒரு எல்லை பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காக இந்த கிராம சேகவர் பிரிவுகள் சம்பந்தமான மீள் நிர்ணயம் ஒன்றை செய்ய வேண்டும் என்ற விவகாரம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு அது சம்பந்தமான சில விதப்புரைகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

இது தொடர்பில் அம்பாறை மாவட்ட செயலக மட்டத்திலும் தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவினாலும் இது சம்பந்தமான விவகாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எல்லைகளை எங்கு, எவ்வாறு பிரிப்பது என்பதில் பிணக்குகள் இருக்கின்றன. இதனை நாங்கள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

இது இரண்டு சமூகங்களுக்கிடையில் பாரிய பிரச்சினையாக மாறாமல், இதனை தீர்த்துக் கொள்வதற்கு நாங்கள் அன்று ஆக்கபூர்வமான தீர்மானங்களை எடுத்திருந்தோம். கடந்த அரசாங்க காலத்தில் வஜிர அபேர்த்தன அமைச்சராக இருந்த காலத்திலும் இது சம்பந்தமாக நாங்கள் கலந்துரையாடி இதற்கு தீர்வுகாண முடியுமா என முயற்சித்தபோதும் அது பலன்தரவில்லை. அது தொடர்பில் நாங்கள் கவலையடைகிறோம்.

இருந்தாலும் இதை பலாத்காரமாக பாராளுமன்றத்தில் அழுத்தி கதைப்பதன் மூலம் மாத்திரம் தீர்த்துக் கொள்ள முடியாது. தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றாக அமர்ந்து, அரசாங்கத்தின் அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடி இதற்கு இரந்தர தீர்வொன்றை காண வேண்டும். மாறாக பாராளுமன்றத்தில் ஆக்ரோஷமான முறையில் கதைப்பதன் மூலம் மாத்திரம் முடிவுக்கு வருகின்ற விடயம் அல்ல.

அதேநேரம் நிலத் தொடர்பற்ற முறையில் ஒரு பிரதேச செயலகம் ஒரு பிரதேசத்தை நிர்வாகம் செய்ய முடியாது. நிலத் தொடர்பற்ற வகையில் அந்த நிர்வாகம் கல்முனையில் அவ்வாறு அமைய வேண்டும் என தமிழ் தரப்பில் அது விரும்பப்படுகின்றபோது, அதேபோன்று நிலத் தொடர்பற்ற வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற கோரளைப்பற்று மேற்கு பிரதேசத்தில் கோரளைப்பற்று மத்திக்கு சொந்தமாக ஏற்கனவே எல்லை நிரணய சபையால் நிரணயிக்கப்பட்டு ஜயந்தியாய, ரிதீதென்ன போன்ற கிராமங்கள் மாத்திரம் இன்று நிலத் தொடர்பற்ற வகையில் இணைக்கப்பட்டிருக்கிறது.

கோரளைப்பற்று மத்தி அது வேண்டுமென்று ஒரு அமைச்சரவை பத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற விடயத்துக்கு மாத்திரமாக, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு ஒரு ஆணைக்குழுவும் பரிந்துரை செய்துள்ள நிலையில் அது சம்பந்தமான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடாமல் வேண்டுமென்று தவிர்த்து வருகின்றனர்.

11 கிராம சேவகர் பிரிகள் அடங்கலாக இருக்கின்ற இந்த கோரளைபற்று மத்தி பிரதேச செயலகத்தின் எல்லைகள் தொடர்பில் பாரிய பிரச்சினை இருக்கிறது. இந்த பிரச்சினைக்கான தீர்வை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும். இந்த விடயத்தில் மட்டக்களப்பு அரச நிர்வாகம் மிகவும் மோசமான முறையில் நடந்துகொள்வது மிகவும் பாரதூரமான விடயமாகும் என்றார்

No comments:

Post a Comment