(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர் நீதிமன்றத்தால் பெயர் குறிப்பிடப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, கோட்டபய ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ மற்றும் அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோருக்கு எதிராக அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை முன்னெடுங்கள். ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் பொய்யாக்கப்பட்டுள்ளது. அதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (01) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, பொய்யுரைப்பதும் ஜனநாயக உரிமை என்று குறிப்பிட்ட சட்டத்தரணிகளும் ஆளும் தரப்பில் உள்ளார்கள். வன்முறைகளுக்கு இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் 2022ஆம் ஆண்டு போராட்டத்தின்போது பாராளுமன்றத்தை கைப்பற்றி, பாராளுமன்றத்துக்கு தீ வைப்பதற்கு வந்தவர்கள்தான் தற்போது அரசாங்கத்தை கைப்பற்றியுள்ளார்கள் என்பதை நினைவுபடுத்த வேண்டும்.
அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு புரிந்துணர்வுடன் பொய்யுரைத்தார்கள். இன்றும் பொய்யுரைக்கிறார்கள். சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டே மக்கள் அதிகாரத்தை வழங்கினார்கள். ஆகவே அரசாங்கத்தின் இருப்பு நீதியமைச்சிலேயே தங்கியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களில் ஊழல் மோசடி தொடர்பில் தன்னிடம் 400 கோப்புக்கள் இருப்பதாக குறிப்பிட்டார். அவற்றின் ஒரு சிலவற்றை வெளிப்படுத்தினார். அந்த கோப்புக்களுக்கு என்ன நேர்ந்தது. எதிர்வரும் காலங்களிலாவது அந்த ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுமா?
இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களின் பெயர்களை உயர் நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் மக்கள் விடுதலை முன்னணி ஊழல்வாதிகளுடன் ‘டீல்’ வைத்திருந்ததை மக்கள் அறியவில்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒருமுறை பாராளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது தற்போதைய ஜனாதிபதி அநுரகுமாரவை நோக்கி “உங்களின் அனைத்து விடயங்களையும் நான் அறிவேன் அவற்றை சொன்னால் கட்சியும் இல்லாமல் போகும், நாட்டை விட்டு வெளியேற நேரிடும்” என்று குறிப்பிட்டார். அதற்கு இன்றுவரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதிலளிக்கவில்லை.
ஆளும் தரப்பிலும் ஊழல் மோசடியாளர்கள் உள்ளார்கள் பேச்சினால் மாத்திரம் நாட்டை முன்னேற்ற முடியாது. சட்டத்தை இயற்றி ஊழல்வாதிகளை சட்டத்தின் முன்னிருத்துங்கள். இன்றுவரை ஒரு ஊழல் மோசடியாளர்களை கூட சட்டத்தின்முன் நிறுத்தவில்லை. அரசாங்கத்தின் முன்னிலையில் உள்ளவர்களின் குடும்பத்தாருக்கு மஹிந்த ராஜபக்ஷவே தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தார். ஆனால் இன்று அவரை திருடன், திருடன் என்று விமர்சிக்கின்றீர்கள்.
பாராளுமன்ற குழுக்கள் ஊடாக வெளிப்படுத்தப்படும் ஊழல் மோசடிகளை வெறும் செய்தியாக்காமல் உரிய சட்டங்களை இயற்றி உரிய நடவடிக்கை எடுங்கள். இதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கப்ரால் ஆகியோர் பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கு எதிராக சட்டத்தின் ஊடாக அடுத்தகட்ட நடவடிக்கையை எடுத்து ஊழல்வாதிகளை பாதுகாக்கப் போவதில்லை என்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று அரசாங்கத்திடம் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment