(எம்.மனோசித்ரா)
தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டங்கள் முற்றாக சீர்குலைக்கப்படும் என்று சமூகத்தில் தோற்றுவிக்கப்பட்ட நிலைப்பாடுகள் பொய்யானவை என்பது தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய மூன்றாம் கட்ட மீளாய்வினை வெற்றிகரமாக நிறைவு செய்தமையால் நான்காம் கட்ட கடனுதவியாக 334 மில்லியன் டொலர்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. இது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் சிறந்த குறிகாட்டியாகுமென தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், மூன்றாம் கட்ட மீளாய்வினை வெற்றிகரமாக நிறைவு செய்தமையால் நான்காம் கட்ட கடனுதவியாக 334 மில்லியன் டொலர்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால் இந்த திட்டம் இல்லாதொழிக்கப்படும் என்றும், நாடு வன்முறையாக மாறும் என்றும் பல்வேறு வதந்திககள் பரப்பப்பட்டன.
எவ்வாறிருப்பினும் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றுள்ளோம். அதன் பிரதி பலனாகவே நான்காம் கட்ட கடன் தொகையைப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது.
எவ்வாறிருப்பினும் வருமான வரி உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் திருத்தங்களை மேற்கொண்டு சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கென்ஜி ஒக்கமுரா, இலங்கை மிகச் சிறந்த முறையில் பொருளாதாரத்தை நிர்வகித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வேலைத்திட்டம் மேலும் 4 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியதாகும். 3 பில்லியன் டொலர்கள் கடனுதவி இங்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த இணக்கப்பாட்டில் ஸ்திர பொருளாதாரத்தைப் பேணுதல், கடன் ஸ்திரத்தன்மையைப் பேணுதல், இவற்றை எதிர்கொள்ளும்போது பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் என்பவை தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.
எவ்வாறிருப்பினும் மக்கள் நிவாரணங்களுக்காக 2024 இல் ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாண்டு அதனையும் நிறைவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய 22.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மறுபுறத்தில் அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம். அந்நிய செலாவணியை மாத்திரம் அதிகரித்துக் கொண்டு நாம் வெற்றியடைந்துள்ளதாக காண்பிக்க விரும்பவில்லை. மாறாக வாகன இறக்குமதி, கடன் மீள் செலுத்தலுக்கும் அதனைப் பயன்படுத்த வேண்டிய நிலைமையும் காணப்படுகிறது.
தற்போது வாகன இறக்குமதி தளர்வு செய்யப்பட்டுள்ளதால் அந்நிய செலாவணி நாட்டிலிருந்து வெளியேறும். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் அதனை மீளப்பெறும் திட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம். அது மாத்திரமின்றி வரி அறவீடு, அரச நிதி முகாமைத்துவம் உள்ளிட்ட கட்டமைப்பு மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றோம்.
2032 ஆம் ஆண்டாகும்போது தேசிய உற்பத்தியில் 95 சதவீத்தை அண்மிப்பதையும் இலக்காகக் கொண்டு செயற்படுகின்றோம். அதற்கமையவே எதிர்வரும் வருடங்களில் கடன் மீள் செலுத்தல் முன்னெடுக்கப்படவுள்ளது. கடன் மறுசீரமைப்பு பணிகளும் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இவற்றின் ஊடாக நாட்டை சரியான பாதையில் கொண்டுசெல்வதில் வெற்றி கண்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.
நிதி முகாமைத்துவத்துக்கு அப்பால் சிறந்த ஆட்சியையும் நாம் காண்பித்துள்ளோம். இந்த நிலைவரமானது முதலீட்டாளர்களுக்கும் சிறந்த குறிகாட்டியாக அமைந்துள்ளது. எமது அரசாங்கத்தின் கீழ் ஜனநாயகம் என்றும் பாதுகாக்கப்படும். தற்போது ஊழல், மோசடிகள் தொடர்பான நம்பிக்கையற்ற தன்மை நீங்கியுள்ளது. எனவே முதலீட்டாளர்கள் அச்சமின்றி தமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று உறுதியளிக்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment