அதிகரித்துள்ள போதைப் பொருள் ஊடுருவல்களால் அழிவடையும் எதிர்கால சந்ததி : சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தி மக்களைக் காப்பாற்றுங்கள் என்றார் ரவிகரன் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Thursday, March 6, 2025

அதிகரித்துள்ள போதைப் பொருள் ஊடுருவல்களால் அழிவடையும் எதிர்கால சந்ததி : சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தி மக்களைக் காப்பாற்றுங்கள் என்றார் ரவிகரன் எம்.பி

வட பகுதியில் அதிகரிந்துள்ள போதைப் பொருள் ஊடுருவல்களாலும், போதைப் பொருள் பாவனைகளாலும் ஒரு தொகுதி எதிர்கால சந்ததியினர் அழிவடைத் தொடங்கியுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே சட்டம் ஒழுங்கைச் சீர்ப்படுத்தி எதிர்கால தலைமுறையினரையும், பொதுமக்களையும் பாதுகாக்க விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் 05.03.2025 அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணை ஒன்றினை முன்மொழிந்தார். இந்நிலையில் குறித்த சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணை தொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், போதையினால் நாடு மட்டுமல்ல எங்களுடைய மாவட்டங்களும் தள்ளாடிக் கொண்டுதான் இருக்கின்றது.

இது தொடர்பில் ஏற்கனவே நான் பாதுகாப்பு அமைச்சின் குழுநிலை விவாதத்தில் கூட போதைப் பொருட்களின் ஊடுருவல்கள் தொடர்பிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் பேசியிருந்தேன்.

இருப்பினும் சக பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமுர்த்தியினால் முன்மொழியப்பட்ட இந்த ஒத்திவைப்புவேளைப் பிரேரணைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நிச்சயமாக மிகவும் பொருத்தமான ஒத்திவைப்புவேளைப் பிரேரணையாகும்.

நாட்டின் அதியுயர்பீடமாகக் காணப்படும் பாராளுமன்றிலே, தற்போது நாட்டில் போதைப் பொருட்களால் சீரழிந்து கொண்டிருக்கும் இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த போதைப் பொருள் ஊடுருவல்கள் பாடசாலைகளில் கூட இடம்பெற்று வருவதை தற்போது நாம் அவதானித்து வருகின்றோம். போதைப் பொருள் பாவனையால் எமது சந்ததிகள், ஒரு தொகுதி எதிர்கால தலைமுறையினர் அழிந்து வருகின்றனர்.

நான் கிராமந்தோறும் மக்கள் சந்திப்பிற்காகச் செல்கின்றபோது, போதைப் பொருள் பாவனையால் தமது கிராமத்தில் பலர் இறந்து விட்டதாகவும், பலர் இறக்கும் நிலையில் பாதிக்கப்பட்டு தடுமாறிக் கொண்டிருப்பதாகவும் சில கிராமங்களில் மக்களால் என்னிடம் முறையிடப்பட்டன.

நாட்டில் இத்தகைய நிலை ஏற்படுவதற்கு காரணம் யார்? எமது நாட்டிலிருக்கும் பாதுகாப்புப் படையினர் சீராகச் செயற்பட்டால் இவ்வாறு போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் இறப்புக்களோ, பாதிப்புக்களோ இருக்காது.

இந்தப் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துகின்ற விடயத்தில் பொலிசாருக்கு முக்கிய பொறுப்பு இருக்கின்றது. சட்டம் ஒழுங்கு முறையாகச் செயற்படுத்துங்கள். இந்த விடயத்தில் கூடிய கரிசனை செலுத்தி போதைப் பொருட்களிடமிருந்து எமது மக்களைக் காப்பாற்றுங்கள். அதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுங்கள் என்றார்.

No comments:

Post a Comment