மக்கள் விடுதலை முன்னணி மன்னிப்பு கோரியதா? என கேள்வி எழுப்பிய கபீர் ஹாசிம் : புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என்றார் அர்ச்சுனா - News View

About Us

About Us

Breaking

Thursday, February 20, 2025

மக்கள் விடுதலை முன்னணி மன்னிப்பு கோரியதா? என கேள்வி எழுப்பிய கபீர் ஹாசிம் : புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என்றார் அர்ச்சுனா

பௌத்தர்களின் புனிதத் தலமான தலதா மாளிகை மீது புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தால் அதற்காக தமிழ் மக்கள் சார்பில் மன்னிப்புக் கோருவதாக இராமநாதன் அர்ச்சுனா எம்.பி. பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி கபீர் ஹாசிம், பௌத்தர்களின் புனிதத் தலமான தலதா மாளிகை மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் ஜே.வி.பி. மன்னிப்பு கோரியதா? யாழ். நூலகம் தொடர்பில் கதைக்கும் ஜே.வி.பி. தலதா மாளிகை மீதான தாக்குதலுக்காக சுய விமர்சனம் செய்யாதது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.

இதன்போது இடை நடுவில் குறுக்கிட்ட அர்ச்சுனா எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரவு செலவுத் திட்ட உரையின்போது, யாழ். நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தெரிவித்திருந்தார். நூலகத்தை தீ வைப்பதற்கு அரசியல் கட்சியொன்று உதவியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் எமது தாய், கட்சியின் பெயர் அதனுடன் தொடர்புபடுத்தப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இருவர் அங்கிருந்தமையால் அந்தக் கட்சி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் நாம் கவலையடைகிறோம். ரணில் விக்கிரமசிங்க சில வருடங்களுக்கு முன்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் இதற்காக மன்னிப்புக் கோரினார்.

ஆனால், அன்று தலதா மாளிகை மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் ஜே.வி.பி மன்னிப்பு கோரியதா?

யாழ். நூலகம் தொடர்பில் கதைக்கும் ஜே. வி.பி யினர் தலதா மாளிகை மீதான தாக்குதலுக்காக சுய விமர்சனம் செய்தார்களா? அதனால் அவர்கள் மற்றவர்கள் தொடர்பில் கதைக்க உரிமையற்றவர்கள். 1974ஆம் ஆண்டுக்கான சாபத்திற்கு அவர்களே பொறுப்பாளர்கள் என்றும் அவர் ஜே.வி.பியினரை விமர்சித்து பல கருத்துக்களை முன் வைத்தார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை யொன்றை முன்வைத்து குறிப்பிட்ட அர்ச்சுனா எம்.பி., யாழ். நூலகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை தொடர்பில் அரசாங்கத்திற்கு நான் நன்றி கூறுகின்றேன். அதேவேளை, தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதலுக்கு நாங்கள் மன்னிப்பு கோரவில்லை என்று கபீர் ஹாசிம் எம் பி கேள்வி எழுப்பினார். அப்போது எனக்கு ஏழு வயது.புலிகள் எங்களை பிரதிநிதித்துவப்படுத்துவர்களாக இருந்தால், அந்த பிழையை அவர்கள் செய்திருந்தால் அதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகின்றோம்.

1983ஆம் ஆண்டில் இருந்து திட்டமிட்ட பாரபட்சத்தை எதிர்நோக்கியதால் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

பழையதை பேச விரும்பவில்லை. முன்னோக்கி செல்லவே விரும்புகின்றோம். இனப் பிரச்சினை தொடர்பாக பேச வேண்டாம். நாங்கள் ஒரே நாடாக பயணிப்போம் என்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினரை நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், நீங்கள் (அச்சுனாவை நோக்கி) ஜே.வி.பி சார்பாக மன்னிப்பு கோருகின்றீர்களா? அல்லது தமிழ் மக்கள் சார்பாக மன்னிப்பு கோருகின்றீர்களா? என்று கேள்வியெழுப்பினார்.

இதற்கு எழுந்து பதிலளித்த அர்ச்சுனா, தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல் புலிகளினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. விடுதலைப் புலிகளை சேர்ந்த 55 ஆயிரம் பேர் வடக்கை சேர்ந்தவர்கள். அதனால் வட மாகாண மக்கள் சார்பாகவே மன்னிப்பு கோரினேன் என்றார்.

இவ்வேளையில் மீண்டும் பதிலளித்து உரையாற்றிய கபீர் ஹாசீம் கூறுகையில், ஜே.வி.பியினரும் தாக்குதல் நடத்தினர். அதற்காக அவர்கள் மன்னிப்பு கோர வேண்டும் என்பதனையே நான் கூறினேன். அவர்களிடம் இருந்தே அவ்விதமான மன்னிப்பையே எதிர்பார்க்கின்றேன் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment