நிதி பிரச்சனை அல்ல; இளைஞர்களே தேவை - வட மாகாண ஆளுநர் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 20, 2025

நிதி பிரச்சனை அல்ல; இளைஞர்களே தேவை - வட மாகாண ஆளுநர்

வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு நிதி பிரச்சனை இல்லை. அபிவிருத்தியை முன்கொண்டு செய்வதற்கான இளைஞர்களே தேவைப்படுகிறார்கள் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

மன்னார், மடு, இரணை இலுப்பைக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை தரமுயர்த்தி உயர்தர வகுப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ந.கோபு தலைமையில் நேற்று (19) இடம்பெற்றபோது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “மாணவர்களை உயர்த்த முடியும் என்கின்ற தூரநோக்கு இப்பாடசாலையின் அதிபரைபோல் இருக்கும் பட்சத்தில் அதனை சாதிக்க முடியும். இன்று பல இடங்களில் நேரான தூரநோக்கு இல்லாமல் இருக்கிறது. இன்று பலரும் எதிர்மறையாக சிந்திப்பவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் எப்போதும் எங்களால் முடியாது. எங்களால் இதனை சாதிக்க இயலாது என்று கூறிக்கொண்டே இருக்கிறார்கள். மக்களுடைய வாழ்க்கைத்தரம் உயராமைக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கின்றது.

பல அலுவலர்களும் அவ்வாறான ஒரு எதிர்மறையான மனம் கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். எதையாவது செய்யக்கூறும்போது எமக்கு அது இல்லை. இது இல்லை என்று கூறுகின்ற ஒரு மனப்போக்கு அவர்களுக்கு காணப்படுகின்றது. அவர்கள் அவ்வாறு இருந்து பழகி விட்டார்கள். வேலைகளை செய்வதற்கு அவர்களுக்கு விருப்பமில்லை.

தற்போது நமக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்த அரசாங்கம் விசேட நிதியை ஒதுக்கி இருக்கின்றது. அது உள்ளூர் வீதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

வவுனியா மாவட்டத்தை தவிர ஏனைய நான்கு மாவட்டங்களில் நான் அரசாங்க அதிபராக இருந்ததன் காரணமாக எனக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் மூளை முடுக்குகள் அனைத்தும் நன்கு தெரியும்.

எனது அலுவலகங்களுக்கு தெரியாத பல விடயங்களை நான் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். குறிப்பாக இந்த இடத்திலே இன்ன விடயம் இருக்கிறது என்பதை கூட இட ரீதியாக அவர்களுக்கு சொல்லி இருக்கிறேன். அந்த அளவிற்கு எனக்கு இந்த பிரதேசங்கள் மிகவும் தெரிந்தவை.

எங்களைப் பொறுத்த வரைக்கும் மிகவும் வறுமையில் உள்ள மக்களினுடைய வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்பதாகவே இருக்கின்றது. அதனை அடைவதற்கு நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

இந்தப் பாடசாலையினுடைய அதிபர் நேராக சிந்திக்கின்ற ஒருவராக இருக்கின்றார். அதேபோலவே இந்த பிரதேசத்தின் விவசாய போதனாசிரியர் ஒருவரை நான் சந்தித்தேன். அவர் மிகவும் துடிப்பான இளைஞனாக காணப்பட்டார். அவர் மிகவும் செயற்பாடு உள்ளவராக காணப்பட்டார். அவ்வாறான இளைஞர்களே அபிவிருத்தி செய்வதற்காக தேவைப்படுகிறார்கள்.

நிதி எங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் எவ்வாறு செயல்படுத்த போகின்றோம் என்பதுதான் இங்கு இருக்கின்ற பிரச்சினை.

இதுவரை எங்களுக்கு பல பிரச்சினைகள் இருந்தது. குறிப்பாக மக்களுடைய தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. மக்கள் அலுவலகங்களுக்கு சென்றால் அங்கு தங்களுடைய செயற்பாடுகளை செய்ய முடியவில்லை என்கின்ற பிரச்சனைகள் இருந்தது. மக்களுடைய தேவைகளை கூட அறிய முடியாமல் இருந்தது. அவை மாற்றப்படுகின்றன.

நாங்கள் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களையே முன்னேற்ற வேண்டும். அரசாங்கம் கூட கிராமபுற வீதிகளை புனரமைக்க வேண்டும் என கூறுகின்றது” எனத் தெரிவித்தார்.

வவுனியா விசேட நிருபர்

No comments:

Post a Comment