ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறியது அமெரிக்கா - News View

About Us

Add+Banner

Wednesday, February 5, 2025

demo-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறியது அமெரிக்கா

usa-united-nations-flag-together-textured-wall-relations-un-united-states-america-usa-united-nations-333219363
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை மற்றும் பலஸ்தீன அகதிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனம் ஆகியவற்றிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள்  பேரவையிலிருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதற்கான அரசாணையை ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்துள்ளாா். இதன் மூலம், அந்த அமைப்புக்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பது முழுமையாக நிறுத்தப்படுகிறது.

இது குறித்து அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பிறகு புதிதாக போா்கள் தொடங்குவதைத் தடுப்பதற்கும் சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டவும் ஐ.நா.வுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. ஆனால் அந்த அமைப்பில் சில துணை அமைப்புகள் இந்த அடிப்படை நோக்கத்திலிருந்து தடம் மாறி அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன. யூதவிரோத செயல்பாடுகளை ஊக்குவிக்கின்றன.

எனவே, மனித உரிமைகளுக்கான ஐ.நா. பிரிவில் இருந்து அமெரிக்கா விலகுகிறது. அதுமட்டுமின்றி, கல்வி, அறிவியல், கலாசார மேம்பாட்டுக்கான ஐ.நா. பிரிவான யுனெஸ்கோ, பலஸ்தீன அகதிகள் நலனுக்கான ஐ.நா. பிரிவான UNRWA ஆகியவற்றுக்கும் அமெரிக்க உதவிகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக, UNRWA வுக்கு இனிமேலும் நிதியுதவி அளிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. அந்த அமைப்பு தொடா்ந்து யூதவிரோத மற்றும் இஸ்ரேல் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. இஸ்ரேலில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபா் மாதம் 7 ஆம் திகதி  நடைபெற்ற ‘பயங்கரவாத’ தாக்குதலில் UNRWA வின் பணியாளா்கள் பங்கேற்றனா்.

அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹமாஸ் குழுவினரின் ஆயுதக் கிடங்குகளாக UNRWA வின் நிலைகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த ஐ.நா. பிரிவில் ஹமாஸ் அமைப்பின் உறுப்பினா்கள் ஊடுருவியுள்ளனா்.

மனித உரிமைகளுக்கு எதிராகச் செயல்படுவோரை ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு பாதுகாத்து வருகிறது. யுனெஸ்கோ அமைப்பும் தொடா்ந்து யூதவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவருகிறது என்று அந்த அரசாணையிலும், அதன் இணைப்பு ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்தும், யூத வரலாற்றை அழிப்பதாகக் கூறி யுனெஸ்கோவிலிருந்தும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடந்த 2019 ஆம் ஆண்டு விலகின. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இருந்தாா்.

எனினும் அவருக்குப் பிறகு அமைந்த ஜோ பைடன் தலைமையிலான அரசு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவை கடந்த 2021 ஆம் ஆண்டு மீண்டும் இணைத்தது.

இந்தச் சூழலில், 2024 ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று, நாட்டின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் மீண்டும் பொறுப்பேற்றாா். 

அதிலிருந்தே உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பவா்களுக்கு பிறப்பின் அடிப்படையில் அளிக்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாட்டைவிட்டு வெளியேற்றுவது, அமெரிக்காவுக்குள் சட்டவிரோத குடியேற்றம், போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு 25 சதவீத கூடுதல் வரிவிதிப்பது போன்ற அதிரடி உத்தரவுகளை டிரம்ப் பிறப்பித்து வருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து இருந்து அமெரிக்காவை மீண்டும் விலகும் உத்தரவை டிரம்ப் தற்போது பிறப்பித்துள்ளாா்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *