அரிசி, தேங்காய் பிரச்சினைக்கு தீர்வு காண முன்னரே தற்போது அந்த பட்டியலில் உப்பும் சேர்ந்துள்ளது : அரசாங்கத்தின் முன்னேற்ற அறிக்கையில் திருப்தியடையக் கூடிய எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை - முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Monday, January 20, 2025

அரிசி, தேங்காய் பிரச்சினைக்கு தீர்வு காண முன்னரே தற்போது அந்த பட்டியலில் உப்பும் சேர்ந்துள்ளது : அரசாங்கத்தின் முன்னேற்ற அறிக்கையில் திருப்தியடையக் கூடிய எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை - முஜிபுர் ரஹ்மான்

(எம்.மனோசித்ரா)

அரசாங்கம் வெளியிட்டுள்ள 100 நாட்கள் முன்னேற்ற அறிக்கையில் எவரும் திருப்தியடையக் கூடிய எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை. அரிசி, தேங்காய் பிரச்சினைக்கு தீர்வு காண முன்னரே தற்போது அந்த பட்டியலில் உப்பும் சேர்ந்துள்ளது. இதே நிலைமை தொடர்ந்தால் மக்கள் உண்ண உணவின்றி பாடுபட வேண்டிய நிலைமையே ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் திங்கட்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 100 நாட்கள் முன்னேற்ற அறிக்கையில் அரசாங்கத்தின் எந்தவொரு வெற்றியும் இல்லை. இந்த நூறு நாட்களில் மக்கள் எந்த வகையிலும் திருப்தியடையவில்லை.

அரிசி பிரச்சினைக்கு இன்று வரை தீர்வு வழங்கப்படவில்லை. இறக்குமதி செய்யப்பட்ட அரிசியையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகிறது.

கடந்த 10ஆம் திகதியுடன் அரிசி இறக்குமதி நிறுத்தப்பட்டது. அதுவரை 160,000 மெட்ரிக் தொன் அரிசி மாத்திரமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நாட்டில் பாவனைக்கு 2 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி தேவையாகும். உள்நாட்டு அரிசி உற்பத்தியாளர்கள் அவற்றை சந்தைக்கு விநியோகிப்பதை முற்றாகக் கைவிட்டுள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் அரிசியின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், அதிக விலைக்கேனும் கொள்வனவு செய்வதற்கு சந்தைகளில் அரிசி இல்லை. சதொச விற்பனை நிலையங்களில் அரிசி காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார். நாட்டில் சுமார் 400 சதொச விற்பனை நிலையங்களே உள்ளன.

தற்போது வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை காலநிலை நிலவுகிறது. பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறித்த பிரதேசங்களிலிருந்து பெப்ரவரியில் அறுவடை ஆரம்பமாகும். ஆனால் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் பாரிய சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

பெப்ரவரி இறுதியில் ரமழான் பண்டிகையும், ஏப்ரலில் புத்தாண்டும் வரவுள்ளது. இவ்வாறு பிரதான பண்டிகைகளை அண்மிக்கின்ற போதிலும், அரசாங்கத்திடம் எந்த வகையிலும் முறையான திட்டமிடலொன்று இல்லை.

76 ஆண்டுகள் சாபத்திலிருந்து நாட்டை மீட்பதாகக் கூறியவர்கள் தற்போது ஒரு கிலோ அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடுகின்றனர். 76 வருட சாபத்தில் வெறுமனே ஒன்று அல்லது இரண்டு ரூபா மாத்திரமே வரியாக அறவிடப்பட்டது என்பதை அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றேன்.

அரசாங்கம் எதைக் கூறினாலும் அரிசி ஆலை உரிமையாளர்களது மாபியாக்களே இன்று விலைகளையும் தீர்மானிக்கின்றன. அது மாத்திரமின்றி தற்போது உப்புக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ உப்பின் விலை 220 ரூபா வரை அதிகரித்துள்ளது. தேங்காய் விலையும் 220 ரூபா உயர்வடைந்துள்ளது. இதனால் தேங்காய் எண்ணெய் விலை 550 ரூபாவிலிருந்து 820 ரூபா வரை உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அனைத்தும் துரிதமாக அதிகரித்துச் செல்கின்றன. ஆட்சியைப் பொறுப்பேற்றவுடன் அத்தியாவசிய பொருட்களுக்கான வட் வரியைக் குறைப்பதாகக் கூறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இதுவரை அதற்குரிய எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment