நாட்டில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் : சுற்றுப்புறச் சூழலை தூய்மைப்படுத்துங்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, January 20, 2025

நாட்டில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் : சுற்றுப்புறச் சூழலை தூய்மைப்படுத்துங்கள்

(செ.சுபதர்ஷனி)

சீரற்ற கால நிலையோடு நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பை தொடர்ந்து 22 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் (MOH) டெங்கு அதி உயர் அபாயம் மிக்க வலையங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இம்மாதம் 19 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 185 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் மாத்திரம் 168 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நாட்டில் நிலவிவரும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக டெங்கு பரவல் அதிகரித்துள்ளமையை காணக் கூடியதாக உள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் பதிவாகக்கூடிய டெங்கு நோயாளர்களின் வீதமும் சடுதியாக அதிகரித்துள்ளது.

டெங்கு பரவலை கருத்தில் கொண்டு 22 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் (MOH) அதி உயர் டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அத்தோடு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இரண்டாக ஆக உயர்வடைந்துள்ளது. எதிர்வரும் தினங்களில் பதிவாகக்கூடிய டெங்கு நோயாளர்களின் வீதம் மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளன.

கம்பஹா (482), கொழும்பு (433), கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதி (411), காலி (197), கண்டி (192), மட்டக்களப்பு (181), இரத்தினபுரி (169) மற்றும் யாழ்ப்பாணம் (126) ஆகிய மாவட்டங்களில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான அதிகரிப்பைக் காணக்கூடியதாக உள்ளது.

முறையான கட்டுப்பாட்டு முறைகளால் மாத்திரமே டெங்கு பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். ஆகையால் இது தொடர்பில் அதிகாரிகள் மாத்திரமல்லாது பொதுமக்களும் அவதானத்துடனும் கரிசனையுடனும் செயற்பட வேண்டும்.

வீட்டுச் சூழல், வழிப்பாட்டுத் தளங்கள், பாடசாலை வளாகம், வர்த்தக நிலையங்கள், கைவிடப்பட்ட காணிகள், கட்டிட நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படும் இடங்களில் மற்றும் தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நுளம்புகள் அதிகளவில் பரவுகின்றன.

ஆகையால் வாராந்தம் இருமுறை வீடு உட்பட சுற்றுப்புறச் சூழலை 15 நிமிடங்கள் தூய்மைப்படுத்துவதன் மூலம் டெங்கு பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

மேலும் பொதுமக்கள் டெங்கு அபாயத்தை கருத்தில் கொண்டு தாம் வாழும் சூழலில் டெங்கு நுளம்புகள் பெருக்கக்கூடிய பகுதிகளை இனங்கண்டு அவற்றை இல்லாதொழித்து தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறும் சுகாதார அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment