எதிர்க்கட்சித் தலைவரும் விரும்புகின்றார் : எவ்வாறு இணைவது என்பது குறித்து விரைவில் பேச்சு என்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க - News View

About Us

About Us

Breaking

Saturday, January 11, 2025

எதிர்க்கட்சித் தலைவரும் விரும்புகின்றார் : எவ்வாறு இணைவது என்பது குறித்து விரைவில் பேச்சு என்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து பயணிப்பதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் விரும்புகின்றார். ஆனால் ஒரு கட்சியை கைவிட்டு இன்னொரு கட்சியில் இணைந்து கொள்வதற்கு பதிலாக ஒரு கூட்டணியாக எவ்வாறு ஒன்றிணைத்து பயணிப்பது என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு அக்கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள ஐக்கிய மக்கள் சக்திக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை வினவியபோதே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டும் ஒரே கொள்கைகளையுடைய இரு வேறு கட்சிகளாகும். அவ்வாறிருக்கையில் ஒரு கட்சியை பிரிதொரு கட்சிக்குள் புகுத்த முடியாது. அதேபோன்று ஒரு கட்சியைக் கைவிட்டு பிரிதொரு கட்சியுடன் இணையவும் முடியாது.

எனவே இரு கட்சிகளையும் பாதுகாத்துக் கொண்டு ஒரு கூட்டணியாக இணைந்து செயற்பட வேண்டும் என்பதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாசவின் நிலைப்பாடாகவுள்ளது. மாறாக இவ்விரண்டு கட்சிகளினதும் இணைவை அவர் எதிர்க்கவில்லை.

இணைந்து செயற்படுதல் என்ற காரணி தொடர்பில் நாம் ஆழமாக ஆராய வேண்டும். அதற்கமைய இரு கட்சிகளும் ஒரே கொள்கையின் கீழ் இணைந்து செயற்படுவதற்கான வழிமுறை குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்வதே சிறந்ததாகும். இரு கட்சிகளினதும் பிரதிநிதிகள் இணைந்து இது குறித்து எதிர்காலத்தில் கலந்துரையாடல்களை முன்னெடுப்பர்.

இணைவு என கூறும்போது ஒன்றை கைவிட்டு பிரிதொன்றுக்கு செல்வோம் என்பது பொருளல்ல. இணைந்து செயற்படுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டால், புரிதலோடு அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்க முடியும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இதில் இணக்கப்பாடு இருக்கிறது. எனினும் அதனை எவ்வாறு செயற்படுத்துவது என அவர் இன்னும் தெளிவுபடுத்தவில்லை.

நாட்டிலுள்ள சகல வலதுசாரி கொள்கைகளையும் கொண்ட தரப்புக்களை இணைத்துக் கொண்டு பயணிப்பதையே நாம் அனைவரும் விரும்புகின்றோம். அது தொடர்பில் எந்தவொரு தரப்பினருடனும் கலந்துரையாடுவதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம்.

எமது ஆரம்ப கட்ட கலந்துரையாடல்களில் இது குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. சகலரது கருத்துக்களுக்கும் முக்கியத்துவமளித்து முன்னோக்கி பயணிப்போம் என்றார்.

No comments:

Post a Comment