சட்டவிரோதமாக ஜேர்மன் வீசாவைப் பயன்படுத்தி ஜேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞன் ஒருவர் சனிக்கிழமை (11) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் இளவாலையைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது, இவர், இந்தியாவின் புதுடில்லிக்கு புறப்படும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானமான AI-282 இல் ஏறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று (11) சென்றுள்ளார்.
விமான சேவை அதிகாரிகளிடம் அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் குறித்து சந்தேகம் அடைந்த விமான சேவை அதிகாரிகள் அந்த ஆவணங்களுடன் பயணியை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்களத்தின் எல்லை ஆய்வு பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தொழில்நுட்ப சோதனையின் பின்னர், அவர் சமர்ப்பித்த ஜெர்மன் வீசா போலியானது என தெரியவந்துள்ளது.
மேலும், ஜேர்மன் நாட்டவர் போல் நடித்து அண்மையில் காங்கேசந்துறை துறைமுகத்தில் இருந்து நாட்டிற்குள் பிரவேசித்த அவர், தனது கடவுச்சீட்டில் போலி குடிவரவு முத்திரையையும் பதிவு செய்துள்ளார்.
இந்த இளைஞன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment