அதிவேகமாக வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டறிவதற்காக போக்குவரத்து அதிகாரிகளுக்கு 91 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான வேகத்தை கணிக்கும் 30 SPEED GUN கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை பொலிஸாருக்கு SPEED GUN கருவிகளை வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (11) பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்படி, இதன் முதற்கட்டமாக நீர்கொழும்பு, களனி, கம்பஹா ஆகிய பிரிவுகளுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்களுக்கும், மேல் மாகாண போக்குவரத்து தெற்குப் பிரிவுப் பணிப்பாளர்களுக்கும் இந்த SPEED GUN கருவிகள் வழங்கப்பட்டன.
மேலும், எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் வாகனப் பிரிவுகளுக்கு இவை வழங்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு, இந்த SPEED GUN கருவியை கையாளுவதற்கு எதிர்காலத்தில் போக்குவரத்து உத்தியோகத்தர்களுக்குத் தேவையான பயிற்சிகளை பொலிஸ் போக்குவரத்துத் தலைமையகம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த SPEED GUN கருவி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட லேசர் தொழில்நுட்பத்துடன் இயக்கப்படுகின்றன. மற்றும் சிறப்பு இரவு போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 24589 விபத்துக்கள் பதிவாகியுள்ளன, அதில் 2242 கார் விபத்துக்களாகும். மேலும் இந்த விபத்துக்களால் 2253 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் அதிவேகமாக வாகனம் ஓட்டும் 31182 பேருக்கான சட்டத்தை பொலிஸார் அமுல்படுத்தியுள்ளதோடு அதிவேகத்தினால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை 731 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலைமையை கருத்திற்கொண்டு, விபத்துக்களை குறைக்கும் வகையில் இந்த SPEED GUN கருவிகள் இலங்கை பொலிஸாருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment