மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று முன்தினம் (20) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 11 தீர்மானங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2019 ஆம் ஆண்டில் க.பொ.த (உயர்தரம்) பெறுபேறுகளின் அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் முதலாவது மருத்துவக் கற்கை மாணவர் அணியினருக்கான மருத்துவமனை உள்ளக சிகிச்சைப் பயிற்சிகள் 2025 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
தெற்காசிய தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ நிறுவகத்தில் (SAITM) காணப்படுகின்ற வசதிகளைப் பயன்படுத்தி மொரட்டுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கு மற்றம் மருத்துவக்கற்கை மாணவர்களின் மருத்துவமனை உள்ளக சிகிச்சைப் பயிற்சிக்காக மருத்துவர் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையின் வசதிகளைப் பயன்படுத்துவதற்கும் இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும், குறித்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் நோய்களின் பல்வகைத்தன்மை போதுமானதாக இன்மை மற்றும் மருத்துவமனைப் பணியாளர் குழாம் மற்றும் விசேட மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறை காரணமாக மொரட்டுவ பல்கலைக்கழக மருத்துக் கற்கை மாணவர்களின் சிகிச்சை பேராசிரியர் பிரிவின் பயிற்சிகளுக்காக மருத்துவர் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையைப் பயன்படுத்துவதில் பிரச்சினைகள் காணப்படுகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.
அதனால், குறித்த மருத்துவக் கற்கை மாணவர்களுக்கு தரப்பண்பான மருத்துவமனை உள்ளக சிகிச்சைப் பயிற்சி வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக களுத்துறை போதனா மருத்துவமனை மற்றும் கல்லஸ்ஸ மகப்பேற்று மற்றும் சிறுவர் மருத்துவமனையைப் பயன்படுத்துவதற்கும், மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவதற்காக களுத்துறை பிரதேச செயலகப் பிரிவில், நாகொட மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணித் துண்டுகள் 02 இனை குறித்த பல்கலைக்கழகத்திற்கு சுவீகரித்துக் கொள்வதற்கும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமரும் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment