எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அதிக கவனமெடுங்கள் : ரவிகரன் எம்.பியிடம் வலியுறுத்திய மாற்றுத் திறனாளிகள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 28, 2025

எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அதிக கவனமெடுங்கள் : ரவிகரன் எம்.பியிடம் வலியுறுத்திய மாற்றுத் திறனாளிகள்

மாற்றுத் திறனாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிக கவனம் செலுத்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் வீ கேன் (We can) மாற்றுத் திறனாளிகள் அமைப்பு வலியுத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மன்னார் - மாந்தைமேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அடம்பன், வேட்டையாமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள வீ கேன் (We can) மாற்றுத் திறனாளிகள் வளாகத்திற்கு 27.01.2025 நேற்று நேரடியாகச் சென்று மாற்றுத் திறனாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போதே குறித்த 'வீ கேன்' மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் மொத்தம் 2,123 மாற்றுத் திறனாளிகள் காணப்படுவதாகவும், அதில் 98 செவிப்புலனற்ற மாற்றுத் திறனாளிகளும், 309 சிறார் மாற்றுத் திறனாளிகளும் காணப்படுவதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்தோடு மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவில் மொத்தம் 414 மாற்றுத் திறனாளிகள் காணப்படுவதுடன் அதில் 16 பேர் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களாகக் காணப்படுவதுடன், 64 சிறார் மாற்றுத் திறனாளிகளும் காணப்படுவதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் இங்குள்ள மாற்றுத் திறனாளிகள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அந்த வகையில் மாற்றுத் திறனாளிகள் போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. 

குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தும் மாற்றுத் திறனாளிகள் அதில் அமர்ந்து பயணிக்க இடமளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

அத்தோடு மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் போதுமான வாழ்வாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமெனவும் இதன்போது கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதேவேளை பொது இடங்களில் குறிப்பாக அரச திணைக்களங்களில் கூட மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகு வசதிகள் இல்லை எனவும், செவிப்புலன் அற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சைகை மொழி பெயர்ப்பாளர் இல்லை எனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மேலும் விசேட தேவையுடைய மாணவர்களின் முக்கிய தேவைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கடனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடசாலை வவுச்சர் திட்டத்தினுள் விசேடகல்வி மாணவர்களை உள்வாங்குதல், பாடசாலைகளில் உள்ள விசேட கல்வி மாணவர்கள் ஒவ்வொருவரதும் இயல்பிற்கேற்ப, அவர்களுக்கு வழங்கப்படும் வாழ்க்கைக் கற்றல் செயற்படுகளுக்கான பொருட்கள் வழங்கப்படுதல், ஒவ்வொரு விசேட கல்வி அலகிற்கும் ஆசிரியர் ஒருவருடன் பராமரிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுதல், வங்கிகளில் விசேட தேவையுடைய சிறார்களுக்கு விசேட சேமிப்புக் கணக்குகளைக் கொண்டுவருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இதன்போது விசேட தேவையுடைய மாணவர்களின் முக்கிய தேவைகள் அடங்கிய மகஜரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பிலும், தம்மிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பிலும் தாம் கவனம் செலுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment