கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு இணைப்பாளர்களை நியமிக்கக் கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 22, 2025

கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு இணைப்பாளர்களை நியமிக்கக் கோரிக்கை

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு இணைப்பாளர்களை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளை நிருவகிக்கும் பொருட்டு அம்மாவட்டங்களில் உள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இணைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு நிருவாக நடவடிக்கை இலகுபடுத்தப்பட்டன.

ஆனால் தற்போது அந்த பதவிகளுக்கு எவரும் நியமிக்கப்படாமையினால் நிருவாக நடவடிக்கைகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் பதவியுயர்வு, நலன்சார் விடயங்கள் போன்றவற்றை துரிதமாக மாகாண ஆணையாளர் அலுவலகத்திற்கு அனுப்புவதில் பல்வேறு காலதாமதங்கள் ஏற்படுகின்றன.

ஆயுர்வேத வைத்தியசாலைகளின் இணைப்பாளர் பதவி என்பது புதிதான ஒரு பதவியல்ல. ஏற்கனவே மூன்று மாவட்டங்களுக்கும் நான்கு பேர் கடமையாற்றியிருந்த ஒரு பதவியாகும்.

திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு தலா ஒருவரும் அம்பாறை மாவட்ட கல்முனை, அம்பாறை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையினை மையப்படுத்தியதாக இருவரும் நியமிப்புச் செய்யப்பட்டு கடமையாற்றி வந்தனர்.

டொக்டர் திருமதி பாஸ்கரன் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளராக கடமையாற்றிய தருணத்திலே சுதேச மருத்துவ ஆணையாளராக பதவியுயர்வு பெற்றுச் சென்றார். அதன் பின்னர் இணைப்பாளர் பதவிக்கு எவரும் நியமிப்புச் செய்யப்படவில்லை.

அத்துடன் கல்முனை பிராந்திய இணைப்பாளராக கடமையாற்றிய டொக்டர் எம்.ஏ. நபீல் தற்போது மாகாண ஆணையாளராக பதவியுயர்வு பெற்றுச் சென்றுள்ளதனால், கல்முனைக்கான இணைப்பாளர் பதவி வெற்றிடமாகியுள்ளது. இவ்வாறு ஏனைய பிராந்தியங்களுக்கான பதவிகளும் வெற்றிடமாகியுள்ளது.

எனவே குறித்த பதவிக்கு சேவை மூப்பு, சிரேஷ்டத்துவம் அடிப்படையில் பொருத்தமானவர்களை நியமித்து ஆயுர்வேத வைத்தியத்துறையின் வளர்ச்சிக்கு உதவுமாறு ஆயுர்வேத வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

(ஒலுவில் மத்திய விசேட நிருபர்)

No comments:

Post a Comment