கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய வட பகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் கடற்றொழில் அமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட்டதுடன், கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் குறிப்பாக வட பகுதியில் இடம்பெறும் சட்டவிரோக கடற்றொழில் செயற்பாடுகளால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளால் கடல் வளங்கள் அழிக்கப்படுதல் மற்றும் வட பகுதி மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் சேதமாக்கப்படுதல் உள்ளிட்ட பிரச்சினைகள் மிக முக்கியமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே மீனவர்கள் எதிர்நோக்கும் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறும், அவ்வாறு நடவடிக்கை எடுக்கத்தவறின் மீனவ மக்கள் பாரிய போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படுமெனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் கடற்றொழில் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்து தருமாறும் இதன்போது பேசப்பட்டுள்ளதுடன், அது தொடர்பிலான மகஜரும் பாராளுமன்ற உறுப்பினரால் கடற்றொழில் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும் முல்லைத்தீவு கடற்றொழில் சங்கங்களின் சமாசத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கையளிக்கப்பட்ட கடற்றொழில் அமைச்சருக்கான மகஜர்களும் இதன்போது கடற்றொழில் அமைச்சரிடம் சேர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தம்மால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலும், கையளிக்கப்பட்ட மகஜர்கள் தொடர்பிலும் கவனஞ்செலுத்துவதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment