இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராகவும், விண்வெளித்துறை செயலராகவும் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இஸ்ரோ தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக் காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய தலைவராக வி.நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் வரும் ஜனவரி 14ஆம் திகதி முறைப்படி பதவியேற்றுக் கொள்கிறார். இஸ்ரோவின் 11ஆவது தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகள் அல்லது மறு அறிவிப்பு வரும் வரை வி.நாராயணன் இஸ்ரோ தலைவராக செயல்படுவார் என மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ( ACC ) அறிவித்துள்ளது.
நியமனக் குழு என்பது மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் முக்கியப் பதவிகளுக்கு சிரேஷ்ட அதிகாரிகளை நியமிப்பதற்கு பொறுப்பான இந்திய அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு ஆகும்.
வி.நாராயணன் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
இஸ்ரோவில் கடந்த 1984ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த வி.நாராயணன் இதுவரை Augmented Satellite Launch Vehicle , Polar Satellite Launch Vehicle எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
தற்போது இவர் திருவனந்தபுரத்தில் உள்ள Liquid Propulsion Systems Centre இன் இயக்குநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வரும் 14 ஆம் திகதி முதல் அவர் இஸ்ரோ தலைவராகிறார்.
இஸ்ரோ ககன்யான், சந்திரயான்-4 திட்டங்களில் கவனம் செலுத்திவரும் நிலையில் அவற்றில் வி.நாராயணன் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment