அரசாங்க நிதியை மோசடி செய்து நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்களின் வீடுகளுக்கு நீதிமன்ற அழைப்பாணைகள் விரைவில் செல்லும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், தற்போது சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்படுகிறார்கள் எனக் குறிப்பிட்ட அவர், மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது என்பதால் அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுவதில்லை. சட்டத்தின்படி அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள், எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி வரை முன்னெடுக்கப்படும். கடந்த கால அரசாங்கங்கள் முன்னெடுத்த திட்டங்கள் ஓரிரு வாரங்களில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதைப் போன்று இத்திட்டம் ஓரிரு வாரங்களில் மறக்கப்படும் என்ற சிந்தனையில் சிலர் கூற்றுக்களை முன்வைத்து வருகின்றனர்.
கிளீன் ஸ்ரீலங்கா என்ற இந்த திட்டத்துக்குள் சுற்றுச் சூழல் தூய்மை பிரதான பங்கு வகிக்கிறது. மனிதர்களின் எண்ணங்கள் மற்றும் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்துவது இச்செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
வீதி ஒழுங்குகள், சட்டங்களை பின்பற்ற வேண்டிய பொறுப்பு நாட்டில் அனைத்து மக்களுக்கும் காணப்படுகிறது. வீதியில் பொலிஸார் இல்லாவிடின் வீதிச் சட்டங்களை பலர் வேண்டுமென்றே மீறுகிறார்கள். அந்த வகையில் சட்டத்தால் மாத்திரம் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. சிந்தனைகளிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.
அரசாங்க நிதியை மோசடி செய்து, நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி நாட்டு மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்கியவர்கள் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
ஊழலுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். குழப்பமடைய வேண்டாம். அவர்களின் வீடுகளுக்கு நீதிமன்றத்தின் அழைப்பாணைகள் வரும். அனைத்தும் தூய்மைப்படுத்தப்படும்.
கடந்த காலங்களைப் போன்று நாம் அமைச்சுக்களை விஸ்தரிக்கவில்லை. உறவினர்களுக்கு உயர் பதவிகளை வழங்கவில்லை. அரச செயற்திட்டங்களில் எமது பெயர்ப் பலகைகளை பொறிக்கவில்லை. நாம் பொறுப்புடன் செயல்படுகிறோம். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகின்றோம்.
சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்படுகிறார்கள். இவ்வளவு காலம் அரசாங்கத்தின் ஆதரவுடன் வைத்தியசாலையில் இருந்த துமிந்த சில்வா தற்போது சிறையில் உள்ளார். அலோசியஸிடமிருந்து மதுவரி அறவிடப்பட்டுள்ளது. அத்துடன் பலருக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment