(இராஜதுரை ஹஷான்)
சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்த திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. அரசியலுக்கு அப்பாற்பட்டு நல்லாட்சி அரசாங்கம் அமுல்படுத்திய 'சக்தி அரிசி கூட்டுறவு திட்டத்தை' அரசாங்கம் மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாடு குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சந்தையில் அரிசி தட்டுப்பாடு திட்டமிட்ட வகையில் ஏற்படுத்தப்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். இதற்கமைய கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு, நுகர்வோர் அதிகார சபையினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசில பகுதிகளில் அதிக விலைக்கு அரிசி விற்கப்படுகிறது. அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக குறுகிய கால அடிப்படையில் அரிசி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நீண்ட கால தீர்வு ஏதும் முன்வைக்கப்படவில்லை.
அரிசி தட்டுப்பாட்டுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொறுப்புக்கூற வேண்டும் என்று நாங்கள் குறிப்பிடவில்லை. வர்த்தமானி வெளியிட்டோ அல்லது இராணுவத்தை கொண்டோ அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண முடியாது என்றார்.
No comments:
Post a Comment