உயர் கல்வித் துறையில் கணினியியல் (Computing) கற்கைகளுக்காக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழிநுட்ப சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எப்.எச்.ஏ. ஷிப்லிக்கு இவ்வாண்டுக்கான தேசிய கல்வியியலாளர் விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவனம், கல்வியமைச்சுடன் இணைந்து கல்வித் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய கல்வியலாளர்களை ஆண்டுதோறும் கௌரவித்து வருகின்றது.
இந்த விருது வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (04) கொழும்பு Monarch Imperial Hotel இல் நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக நியூசிலாந்துக்கான இலங்கை தூதுவர் டேவிட் பைன் மற்றும் சிறப்பு அதிதியாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது, கல்வி மற்றும் உயர்கல்வி என இரு பிரிவுகளிலும் சிறந்து விளங்கிய பல கல்வியியலாளர்கள் தேசிய கல்வியியலாளர் விருதுடன் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
அதில், நித்தவூரைச் சேர்ந்த கலாநிதி எப்.எச்.ஏ. ஷிப்லிக்கு உயர் கல்வித் துறையில் கணினியியல் (Computing) கற்கைகளுக்காக தேசிய கல்வியியலாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் வர்த்தக நிர்வாகத் துறையிலே இளமாணி (BBA) பட்டம் பெற்றவர் என்பதோடு, தகவல் தொழிநுட்பத்திலே முறையே இளமாணி, முதுமாணி (BSc, MSc) பட்டங்களை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு கலாநிதி கற்கையினையும் நிறைவு செய்த ஒருவராவார்.
அத்தோடு நாடு முழுக்க, கல்வி ரீதியான மற்றும் பல்கலைக்கழக நுழைவு தொடர்பான ஆலோசனைகள் என்பவற்றை சமூகத்துக்கு வழங்கிவரும் நண்பர் ஷிப்லி Innovation, Digital Education, E Commerce போன்ற துறைகளிலும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் ஒருவரும் கூட.
சர்வதேச ரீதியான பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ள இவர், ஆய்வு ரீதியான பல மாநாடுகளிலும் பங்காற்றியுள்ளதோடு, பல சர்வதேச கல்வி நிறுவனங்களினது அங்கத்தவராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment