வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நீதிமன்றங்கள் ஊடாக 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சாரதிகள் ஈடுபட்ட பல குற்றச்செயல்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளின் போதே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் நடைபெறுவதற்கு முக்கிய காரணங்கள் கவனக்குறைவாக வாகனத்தை செலுத்துதல் மற்றும் தரமற்ற வாகனங்கள் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் பேராசிரியர் மொஹமட் மஹீஸ் தெரிவித்துள்ளார்.
எனவே, வாகனத்தை செலுத்துவதற்கு முன்னர் அதன் தரத்தை பரிசோதிப்பது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் வீதி அமைப்பில் காணப்படும் குறைபாடுகளும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாக பேராசிரியர் மொஹமட் மஹீஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment