இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) மெகா ஏலத்தில் இலங்கை வீரர்கள் 29 பேர் இடம்பெற்றுள்ளனர்.
சவூதி ஆரேபியாவின் ஜித்தா நகரில் எதிர்வரும் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இடம்பெறும் வீரர்கள் விபரம் வெளியாகியுள்ளது.
இந்த ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் பதிவு கடந்த நவம்பர் 4 ஆம் திகதியுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்தது. இதனையடுத்து மொத்தம் 1574 வீரர்கள் ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.
கடந்த பருவத்தில் இருந்து 10 அணிகளும் மொத்தம் 45 வீரர்களை தமது அணியுடன் தக்கவைத்துள்ளன. இதில் ஒரே இலங்கை வீரராக மதீஷ பதிரணவை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துள்ளது. இதனால் வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன உட்பட ஏனைய இலங்கை வீரர்கள் அனைவரும் இம்முறை மெகா ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக இந்தியாவின் 1165 வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்றிருப்பதோடு வெளிநாடுகளில் அதிகபட்சம் தென்னாபிரிக்காவின் 91 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
டெல்லி கெபிடல்ஸ், லக்னோ சுப்பர் ஜயன்ட் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் தலைவர்களான முறையே ரிஷாப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியேரை அந்த அணிகள் தக்க வைக்காத நிலையில் இம்முறை மெகா ஏலத்தில் அவர்களும் பங்கேற்கின்றனர்.
இவர்கள் இந்திய நாணயப்படி 2 கோடி ரூபா அடிப்படை விலையிலேயே மெகா ஏலத்தில் வருகின்றனர். தவர, ஆர். அஷ்வின், யுஸ்வேன்திரா சஹல் உட்பட இந்திய வீரர்கள் பலரும் 2 கோடி ரூபா அடிப்படை விலையுடன் மெகா ஏலத்தில் வருகின்றனர்.
2024 இல் கொல்கத்தா அணியால் 24.50 கோடி ரூபாவுக்கு வாங்கப்பட்டு ஐ.பி.எல். வரலாற்றில அதிக விலைபோன வீரராக பதிவான மிட்சல் ஸ்டார்க் இம்முறை 2 கோடி ரூபா அடிப்படை விலையுடன் ஏலத்திற்கு வருகின்றார்.
2014 தொடக்கம் டி20 கிரிக்கெட்டில் ஆடாத அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜேம்ஸ் அன்டர்சனும் இம்முறை மெகா ஏலத்தில் 1.25 கோடி ரூபா அடிப்படை விலையுடன் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நீண்ட பட்டியலில் இத்தாலி வீரர் ஒருவர், அமெரிக்க வீரர்கள் பத்துப் பேர் கனடாவின் நான்கு வீரர்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஓர் அணியால் மொத்தம் 25 வீரர்கள் வரை தேர்வு செய்ய முடியும். இதன்படி வீரர்கள் தேர்வுக்கு இன்னும் 204 இடங்களே எஞ்சியுள்ளன. ஒவ்வொரு அணியும் மொத்தம் 120 கோடி ரூபாவை செலவிட முடியும் என்ற நிலையில் ஏற்கனவே வீரர்களை தக்கவைக்க செலவிட்ட தொகை தவிர்த்து எஞ்சிய தொகையையே மெகா ஏலத்தில் செலவிட முடியும்.
இதன்படி பஞ்சாம் கிங்ஸ் அணி அதிகபட்சமாக 110.5 கோடி ரூபாவுடன் இம்முறை மொகா ஏலத்தில் பங்கேற்பதோடு இதற்கு அடுத்து றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் (83 கோடி ரூபா), டெல்லி கெபிடல்ஸ் (73 கோடி ரூபா), குஜராத் டைடன்ஸ் (69 கோடி ரூபா), லக்னோ சுப்பர் ஜயன்ட் (69 கோடி ரூபா), சென்னை சுப்பர் கிங்ஸ் (55 கோடி ரூபா), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (51 கோடி ரூபா), மும்பை இந்தியன்ஸ் (45 கோடி ரூபா), சன்ரைசஸ் ஹைதராபாத் (45 கோடி ரூபா), ராஜஸ்தான் றோயல்ஸ் (41 கோடி ரூகா) அணிகள் உள்ளன.
No comments:
Post a Comment