இலங்கையில் WhatsApp பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, October 28, 2024

இலங்கையில் WhatsApp பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அதிகளவில் வட்ஸ்அப் (WhatsApp) கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு வருகிறது. 

இலங்கையில் வட்ஸ்அப் (WhatsApp) கணக்குகளை ஊடுருவல் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹேக்கர்கள் சரிபார்ப்பு குறியீட்டு இலக்கத்தின் (verification code) மூலம்  வட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்து உள்நுழைந்து தொலைபேசி தொடர்பு விபரங்களை பெற்றுக் கொள்கின்றனர்.

அண்மையில் இவ்வாறான சம்பவங்களுக்கு பலர் முகம் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு எதிர்பாராமல் வட்ஸ்அப் ஊடாக ஒரு தெரிந்த நபர்களிடம் இருந்து சரிபார்ப்பு குறியீட்டு இலக்கம் (verification code) அனுப்பப்படுகிறது.

ஹேக்கர்கள் வட்ஸ்அப் ஊடாக தொடர்பு கொண்டு நண்பர்களாகவோ அல்லது அறிமுகமானவர்களாகவோ தம்மை காட்டுடிக்கொண்டு சரி பார்ப்பு குறியீட்டு இலக்கத்தை கோருகின்றார்கள். அந்த இலக்கத்தை கோரும் நபருக்கு ஒரு முறை அனுப்பியதும் வட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்படுகிறது.

வட்ஸ்அப் பயனர்களின் கணக்குகள் ஊடுருவல் செய்யப்படும் அபாயம் நாட்டில் அதிகளவில் உள்ளதால், மூன்றாம் தரப்பினருடன் எந்த ஒரு கடவுச்சொல்லையும் (OTP) பகிர வேண்டாம் கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.

இதுவரையில் மூன்று வட்சப் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.

மேலும், Zoom ஊடாக கலந்துரையாடல்களில் பங்குபற்றுவதற்கான code கள் உள்ளிடுமாறு வெளிநாட்டவர்களிடம் இருந்து பெறப்படும் செய்திகளுக்கு பதிலளிப்பதன் மூலம் இலங்கையர்களின் வட்ஸ்அப் கணக்குகள் ஊடுருவல் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்ட  கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர்  தெரிவிக்கையில், எனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் மனைவியிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்டார். மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட பிறகு, அவர் தவறுதலாக ஒரு குறியீட்டை தனக்கு அனுப்பியதாகவும், அது மீண்டும் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார். இது உண்மையானது என கருதி, குறியீட்டைப் பகிர்ந்து கொண்டேன்.  பின்னர் எனது வட்ஸ்அப் கணக்கு உடனடியாக ஹேக் செய்யப்பட்டது.

எனது வட்ஸ்அப் கணக்கிலுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர். அதாவது,  தான்  நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறி சிறிய தொகை பணத்தை கோரியுள்ளனர். இவ்வாறு அனுப்பப்பட்ட  குறுஞ்செய்தியை பார்த்த நண்பர் ஒருவர்  நான் நிதி நெருக்கடியில் உள்ளேனா என்பதை அறிய எனது மனைவியை தொடர்புகோட்டு விசாரித்துள்ளார்.

இந்நிலையில், பலமுறை ஹேக் செய்யப்பட்ட வட்ஸ்அப்பை மீண்டும் நிறுவிய போதிலும், 72 மணி நேரமாகியும்  என்னால் அணுகலை மீண்டும் பெற முடியவில்லை.பின்னர்  பொலிஸ் நிலையத்திரல் முறைப்பாடு செய்து வட்ஸ்அப் உதவியை (WhatsApp support) நாடியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில், தடயவியல் சைபர் மோசடி நிபுணர்கள் ஹேக்கர்கள் பயன்படுத்தும் இரண்டு-படி முறையை விளக்கினர்.

அதாவது,  முதலில், அவர்கள் சரிபார்ப்பு குறியீடு மூலம் பயனரின் வட்ஸ்அப் கணக்கை அணுகுவார்கள். பின்னர் நிதி உதவிக்கான கோரிக்கைகளுடன் பயனரின் தொலைபேசி இலக்கங்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் 50,000 முதல் 100,000 ரூபாய் வரை அனுப்பியதாகத் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறே அரசியல்வாதிகளான முஜிபுர் ரஹ்மான் மற்றும் பசீர் சேகுதாவுத் ஆகியோரின் வட்ஸ்அப் கணக்கு இலக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இது தொடர்பில் பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment