இலங்கைக்கு எவ்வித பயணத் தடையும் விதிக்கப்படவில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது தொடர்பில் எழுந்துள்ள சந்தேககங்கள் மற்றும் தவறான தகவல்களுக்கு விளக்கமளித்துள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட அமெரிக்க பாதுகாப்பு எச்சரிக்கையானது, ஒரு குறிப்பிட்ட அச்சுறுத்தல் காரணமாக அறுகம்பை பகுதிக்கு மாத்திரம் விடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரபலமான சுற்றுலாத் தலங்களான பிரான்ஸ், இத்தாலி, மாலைதீவு போன்ற நாடுகளிலும் விடுக்கப்பட்டுள்ளதைப் போன்று இலங்கைக்கான பாதுகாப்பு எச்சரிக்கையானது 2ஆம் மட்டத்திலேயே இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் குறிப்பிட்டுளார்.
அருகம்பை பகுதியில் ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பான அச்சுறுத்தல் இருப்பதை அறிந்ததைத் தொடர்ந்து, குறித்த விடயங்களை இலங்கை அதிகாரிகளுடன் தூதரகம் பகிர்ந்து கொண்டதாகவும் அதற்கு அரசாங்கம் விரைவாக செயற்பட்டதாகவும் சங் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியதாக சங் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த அறிவிப்பு வரும் வரை அருகம்பையை தவிர்க்குமாறே தெரிவிக்கப்பட்டதோடு, இலங்கைக்கான எமது ஒட்டுமொத்த பாதுகாப்பு ஆலோசனையானது மட்டம் 2 இல் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறுகம்பை பகுதியில் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளை இலக்குவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக அச்சம் எழுந்த நிலையில் கடந்த வாரம் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம், குறித்த பகுதியிலிருந்து அமெரிக்க தூதரக ஊழியர்கள் மற்றும் அமெரிக்கர்களை வெளியேறுமாறும், மறுஅறிவித்தல் வரை அங்கு செல்ல வேண்டாமெனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆயினும் குறித்த பகுதியில் வெளிநாட்டவர்கள் மற்றும் இந்நாட்டு மக்களுக்கு எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment