கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரை நுகேகொடை பதில் நீதவானிடம் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நுகேகொடை மிரிஹானவில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத, பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நேற்று (31) கைது செய்யப்பட்டார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவிற்கு சொந்தமான மிரிஹான எம்புல்தெனிய சாலாவ வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று இருப்பதாக பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, மிரிஹான பொலிஸார் நுகேகொட நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, குறித்த வீட்டிற்குச் சென்று வாகனத்தை சோதனையிட்டனர்.
இதன்போது, இலக்கத் தகடு இல்லாத சம்பந்தப்பட்ட கார் கடந்த 26ஆம் திகதி கண்டறியப்பட்டது.
குறித்த வீட்டில், முன்னாள் அமைச்சரின் மனைவியின் தாயார் வசிப்பதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர், கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் அந்த காரை தமது வீட்டின் வாகன தரிப்பிடத்திற்கு கொண்டு வந்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், அவரது மனைவியும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment