(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் பல்வேறு வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், எவ்வித தடையும் இன்றி அதனை முன்னெடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. இவ்வாரத்துக்குள் வேட்புமனு தாக்கலுக்கான தினத்தை ஆணைக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் பல்வேறு வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், எவ்வித தடையும் இன்றி அதனை முன்னெடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய இவ்வாரம் வேட்புமனு தாக்கலுக்கான தினத்தை அறிவிக்கவுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் சட்டத்துக்கமைய திங்கள் தவிர்ந்த செவ்வாய் - வெள்ளிக்கிழமை நாட்களில் அதனை அறிவிக்க முடியும்.
வேட்பாளர்கள் ஏதாவதொன்றை பேசிக் கொண்டிருக்காமல் கடனை மீளச் செலுத்த ஆரம்பித்த பின்னர் அதனை எவ்வாறு செலுத்துவது என்ற திட்டத்தை முன்வைக்க வேண்டும். அந்நிய செலாவணியின் ஊடாக வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டமாகும்.
அநுரகுமார திஸாநாயக்கவும், ரணில் விக்கிரமசிங்கவும் தமது திட்டங்களை முன்வைக்க வேண்டும்.
பொருட்களின் விலைகளைக் குறைத்து, வரி சுமைகளைக் குறைத்து தமக்கு நிவாரணம் வழங்கக் கூடிய தலைவர் ஒருவரையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். அரச வருமானத்தை டொலர்களால் அதிகரித்தால் மாத்திரமே இதனை செய்ய முடியும்.
முன்னர் பொதுஜன பெரமுனவை பிரசித்தப்படுத்தியவர்களே தற்போது அநுரகுமார திஸாநாயக்கவை வெளிநாட்டுக்கு அழைத்து அவரை பிரபலப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தேர்தலின் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷவைப் போன்ற நிலைமையே இவர்களுக்கும் ஏற்படும் என்றார்.
No comments:
Post a Comment