ஆதரவளிக்க அவுஸ்திரேலியா அர்ப்பணிப்புடன் இருக்கிறது - முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் - News View

About Us

About Us

Breaking

Monday, July 22, 2024

ஆதரவளிக்க அவுஸ்திரேலியா அர்ப்பணிப்புடன் இருக்கிறது - முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன்

இந்து சமுத்திரத்தின் ஊடான பயணத்தை உறுதிப்படுத்தவும், பிராந்திய நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும் ஆதரவளிக்க அவுஸ்திரேலியா அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் Geopolitical Cartographer” இனால் ஏற்பாடு செய்யப்பட்ட சொற்பொழிவில் கலந்து கொண்டு “அவுஸ்திரேலியாவும் இந்து சமுத்திரமும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தமது தேசிய நலன்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும், பலவந்தமாக அல்லது தமது இறையாண்மையில் சிக்கலை ஏற்படுத்தக்கூடிய ஏற்பாடுகளைத் தவிர்க்க வேண்டும் எனவும் ஸ்கொட் மொரிசன் சுட்டிக்காட்டினார்.

புவிசார் அரசியல் அழுத்தங்களுக்கு முன்னால் சிறிய மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதில் இந்து சமுத்திரம் மற்றும் அவுஸ்திரேலியாவின் பங்களிப்பின் மூலோபாய முக்கியத்துவத்தை அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் தனது உரையில் வலியுறுத்தினார்.

குறிப்பாக உலகின் வல்லரசு நாடுகளின் அதிகரித்து வரும் அழுத்தங்களின் முன்னால், பல்வேறு நாடுகளும் அவற்றை எதிர்ப்பதன் மூலம் தங்கள் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். 

மேலும், தற்போதைய உலகில் அரசியல் நம்பிக்கைகள் அல்லது சித்தாந்தங்களை மாற்றுவதை விட பொருளாதார காரணிகள் அரசியல் நிகழ்வுகள் மற்றும் முடிவுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கொவிட்-19 தொற்று, உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பாரிய பொருளாதார சரிவை ஏற்படுத்தியது என்றும், அந்த நெருக்கடியின் போது எடுக்கப்பட்ட தேவையான நிதி நடவடிக்கைகளின் விளைவாக, நாடுகளில் பணவீக்கம் அதிகரித்தது என்றும் மொரிசன் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கைகள் அவசியமானதாக இருந்தாலும், அவை வட்டி விகிதங்கள் அதிகரிப்பதற்கும், உலகெங்கிலும் மோசமான வாழ்க்கைச் செலவுகளுக்கும் வழிவகுத்தன என்றும், சுட்டிக்காட்டிய அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர், உலகளவில் நாடுகளின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியதன் காரணமாக உயரும் பாதுகாப்புச் செலவுகள் எவ்வாறு இந்த பணவீக்க நிலைமையை மேலும் அதிகரித்தன என்றும் தெளிவுபடுத்தினார்.

நீடிக்கப்பட்ட நிதிக் கொள்கைகள் மற்றும் அதிக வட்டி விகிதங்கள் உள்ளடங்கிய இந்த புதிய பொருளாதார சூழலை நிர்வகிப்பதில் அரசாங்கங்கள் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும் என்றும் ஸ்கொட் மொரிசன் வலியுறுத்தினார். 

பல்வேறு நாடுகளில் உள்ள அரசாங்கங்களும் வர்த்தகங்களும் தங்கள் பொருளாதார தீர்மானத்தின்போது, புவிசார் அரசியல் அபாயங்களைப் புரிந்து கொண்டு அவற்றையும் உள்ளடக்க வேண்டும் என்றும் மொரிசன் குறிப்பிட்டார்.

அதன் பின்னர், Geopolitical Cartographer அமைப்பின் இணை ஆலோசகர் மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசனும் கலந்துகொண்டார்.

சிறிய நாடுகள் புவிசார் அரசியல் சூழலில் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்ட ஸ்கொட் மொரிசன், இந்த நாடுகளின் இறையாண்மையைப் பேணுவதுடன் வெளிச் செல்வாக்குகளை எதிர்ப்பதற்கு ஆதரவளிக்க அவுஸ்திரேலியா அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக, “க்வாட்” அமைப்பின் கட்டமைப்பிற்குள் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவம் மற்றும் இந்து சமுத்திரத்தில் அதிக அளவில் மனிதாபிமான, பொருளாதார மற்றும் மூலோபாய ஒத்துழைப்பின் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் அழுத்தம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், தேசிய நலன்கள் அல்லது தேசிய பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்காத வெளிப்படையான உடன்படிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஸ்கொட் மொரிசன் வலியுறுத்தினார்.

“ஆகுஸ்” (AUKUS), “பிரிக்ஸ்” (BRICS) மற்றும் “க்வார்ட்” (Quad) போன்ற பலதரப்பு அமைப்புகளின் தாக்கத்தை முன்னாள் தலைவர்கள் இருவரும் கோடிட்டுக் காட்டினர். இந்த அமைப்புகள் எப்போதும் ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. ஆனால் பொதுவான நலன்களில் ஒத்துழைப்புடன் செயற்பட பெறுமதிமிக்க வாய்ப்புகளை வழங்குவதாக ஸ்கொட் மொரிசன் குறிப்பிட்டார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் லலிதா கபூர், ( Lalita Kapur), இலங்கைக்கான துருக்கிய தூதுவர் செமி லுட்ஃபு தர்கட், (Semih Lütfü Turgut), இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் மியோன் லீ, (Miyon Lee), இலங்கைக்கான ஜப்பானிய துணைத் தூதுவர் கட்சுகி கதரோ, (Katsuki Kotaro), இலங்கைக்கான அமெரிக்கத் தூதுக்குழுவின் பிரதானி டக்ளஸ் சோனெக், (Douglas Sonnek), ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான துணைத் தூதுவர் லார்ஸ் பிரெடல், (Lars Bredal), உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகராலயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ரெனே எவர்சன்-வார்னி, (René Everson-Varney) உட்பட நியூசிலாந்து, இத்தாலி, இந்தியா, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தூதுக்குழுக்களின் பிரதிநிதிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இலங்கை-அவுஸ்திரேலியா வர்த்தக சபை உறுப்பினர்கள், சிவில் சமூகம் மற்றும் சிந்தனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் வர்த்ககப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment