19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் உரிய முறையில் நிறைவேற்றப்படாததால், ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை இன்று (15) காலை முதல் விசாரித்த உயர் நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்தது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முறையாக நிறைவேற்றப்படவில்லை என்பதால் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அதனை அங்கீகரிக்க முன்பதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதால் அதன் மூலம் அரசியலமைப்பு மீறப்படும் என நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் எனக் கோரி சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுன அந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
19 ஆவது திருத்தத்தின் ஊடாக அரசியலமைப்பின் 70 ஆவது சரத்து திருத்தப்பட்டு தெரிவு செய்யப்படும் பாராளுமன்றத்தை ஒரு வருடத்தின் பின்னர் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி இழந்துள்ளதாக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டார்.
மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம், சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டடிருந்தனர்.
19 ஆவது திருத்தம் பொதுமக்கள் கருத்து கணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் தீர்ப்பு வழங்கிய போதிலும் இதுவரை மக்கள் கருத்துக்கணிப்பின் மூலம் அது அங்கீகரிக்கப்படவில்லை என மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்தோடு, பொதுமக்கள் கருத்து கணிப்புக்குட்படுத்தி, அதனை நிறைவேற்றும் வரை, ஜனாதிபதி தேர்தலை நடத்துவது அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பு வழங்குமாறு குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment