(நா.தனுஜா)
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இருநாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (07) சிங்கப்பூருக்குப் பயணமாகவுள்ளார்.
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்குச் செல்லும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை திங்கட்கிழமை (08) வரை அங்கு தங்கியிருந்து உத்தியோகபூர்வ இரு தரப்பு சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
ஏற்கனவே ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் அழைப்பின் பேரில் கடந்த 1 - 7 ஆம் திகதி வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் அலி சப்ரி, இன்றையதினம் அங்கிருந்து சிங்கப்பூர் செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்விஜயத்தின்போது இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பாரம்பரிய நல்லுறவையும் பல்துறை சார்ந்த ஒத்துழைப்புக்களையும் மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் பரந்துபட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.
அதேவேளை இன்றும், நாளையும் இடம்பெறவுள்ள உத்தியோகபூர்வ சந்திப்புக்களைத் தொடர்ந்து, நாளைமறுதினம் (09) சிங்கப்பூரில் நடைபெறும் 2024 ஆம் ஆண்டுக்கான ரொயிட்டர்ஸ் நெக்ஸ்ட் ஆசிய - பசுபிக் மாநாட்டில் பங்கேற்பார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment