நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி : இதுவரை 52 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Monday, July 15, 2024

நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி : இதுவரை 52 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு

கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 52 மனித எலுப்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவு - கொக்குத் தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின், பத்தாம் நாள் இன்றைய (15) அகழ்வாய்வுப் பணிகளின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர் கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்டத்தின் 10ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று (15) இடம்பெற்றது.

இன்றுடன் அனேகமாக இந்த மனிதப் புதைகுழியில் இருந்த மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுவதும் மீட்கப்பட்டுள்ளன.

ஒட்டு மொத்தமாக இதுவரை 52 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்க்கப்பட்டுள்ளன.
அத்துடன் இன்று துப்பாக்கிச் சன்னம் மற்றும் திறப்புக் கோர்வையும் சான்றுப் பொருட்களாக மீட்க்கப்பட்டுள்ளன. அடுத்துவரும் நாட்களில் இந்த புதைகுழி தொடர்பான சில நீதிமன்ற நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்தார்

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தலைமையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் தடயவியல் பொலிசார், உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் இந்த பத்தாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றன.

அந்த வகையில் தொடர்ச்சியாக இடம்பெறும் அகழ்வாய்வுப் பணிகளில் இன்றுவரை (15) அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளிலிருந்து மூன்றாம் கட்டத்தில் 12 எலும்புக் கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு கட்ட அகழ்வாய்வுகளின்போது 40 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை மீட்கப்பட்ட 12 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகளுடன் மொத்தம் 52 மனித  எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன்மாதம் 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக, கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தினை அகழ்ந்தபோது மனிதப் புதைகுழியொன்று இனங்காணப்பட்டிருந்தது.

இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இவ்வாறு இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழி இரண்டு கட்டங்களாக அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இவ்வாறு இரு கட்டங்களாக இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்படி இதுவரையில் குறித்த மனிதப் புதைகுழியிலிருந்து 40 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு போராளிகள் பயன்படுத்தும் இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன. 

அத்தோடு இரண்டாங்கட்ட அகழ்வாய்வு பணிகளின்போது குறித்த மனிதப் புதைகுழி வளாகம் விசேட ஸ்கேன் கருவி மூலம் ஆய்வு செய்யப்பட்டிருந்தது. குறித்த ஸ்கேன் கருவி ஆய்வின் மூலம் முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதான வீதியின் கீழ்ப்பகுதியிலும் மேலும்பல மனித எச்சங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டிருந்தது. 

இந்நிலையில் குறித்த மனிதப் புதைகுழி அகழ்வாய்விற்கென ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் முடிவுற்றதால் அகழ்வாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான சூழலில் கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீளவும் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில்  மீண்டும் 04.07.2024 மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகி இன்றையதினம் பத்தாம் நாள் அகழ்வுகளுடன் நிறைவு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment