தமிழ் பேசும் பொது வேட்பாளரே அவசியம் என்கிறார் பஷீர் சேகுதாவூத் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 19, 2024

தமிழ் பேசும் பொது வேட்பாளரே அவசியம் என்கிறார் பஷீர் சேகுதாவூத்

ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி நாட்டிலுள்ள தமிழ், முஸ்லிம், மலையக சிறுபான்மை சமூகங்களின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக தமிழ் பேசும் சிறுபான்மை பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டுமென ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வரவுள்ள ஜனாதிபதித் தேர்தல் பேசு பொருளாக மாறியிருக்கின்றது. பெருந்தேசிய கட்சிகளின் உத்தேச வேட்பாளர்கள் வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகியவற்றுக்கு வந்து சிறுபான்மை சமூகங்களின் ஆதரவை கோரி நிற்கின்றனர்.

இத்தேர்தல் முன்னெப்பொழுதும் இருந்திராத அளவுக்கு மிக பிரமாண்டமான போட்டியாக விஷ்வரூபம் எடுக்க இருக்கின்றது. எந்தவொரு வேட்பாளரும் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது என்பது கல்லில் நார் உரிப்பது போல கடினமாக இருக்கும்.

அதற்கும் அப்பால் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளை பெற வேண்டுமாயின், உச்சபட்ச பகீரத பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்றால் மிகையாகாது.

இலங்கையில் சிறுபான்மை சமூகங்களிலிருந்து ஜனாதிபதி ஒருவர் தோற்றம் பெற முடியாது. ஆனால் ஜனாதிபதி யார்? என்பதை தீர்மானிக்கின்ற சக்தியாக சிறுபான்மை சமூகங்கள் மாற முடியும்.

அதற்கான வாய்ப்பு வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கண் முன் தெரிகின்றது. எனவே இவ்வாய்ப்பை சரியான தருணமாக பயன்படுத்தி தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக தமிழ் பேசும் சிறுபான்மை பொது வேட்பாளர் ஒருவரை தேர்தலில் நிறுத்த வேண்டும்.

அவர் தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் வென்றவராக விளங்க வேண்டும். பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நீண்ட அரசியல் அனுபவம், நிறைந்த ஆற்றல் மிக்கவராக திகழ வேண்டும்.

சிங்கள முற்போக்கு சக்திகளின் ஆதரவை பெறக் கூடியவராகவும் இருக்க வேண்டும். 

இவ்வாறான ஒரு தமிழ் பேசும் சிறுபான்மை பொது வேட்பாளரை தேர்தலில் நிறுத்துவது தொடர்பாக சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், பொதுநல செயற்பாட்டாளர்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தி தீர்க்கமான, தீர்க்கதரிசனமான தீர்மானத்தை எட்ட வேண்டும்.

தமிழ் பேசும் சிறுபான்மை பொது வேட்பாளருக்கு சிறுபான்மை சமூகங்களின் மக்களாணை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment