2024ஆம் ஆண்டுக்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் ஜூலை 15ஆம் திகதி அறிவிக்கப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உத்தேச மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் எழுத்து மூலமான கருத்துகள் ஜூலை 08ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். அதேபோன்று வாய் மூலமான கருத்துக்கள் ஜூலை 09ஆம் திகதி பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கட்டண திருத்தத்தினூடாக மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளது. குறைக்கப்பட்ட சதவீதங்கள் ஜூலை 15ஆம் திகதி அறிவிக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17 ஆவது பிரிவின் கீழ் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த பொது ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.
முன்மொழியப்பட்ட இரண்டாவது கட்டணத் திருத்தம் தொடர்பான எழுத்துபூர்வ கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை ‘உத்தேசிக்கப்பட்டுள்ள 2 வது மின்சாரக் கட்டணம் 2024 - பொது ஆலோசனை கேட்டல்’ இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 6ஆவது மாடி, இலங்கை வங்கி வர்த்தக கோபுரம், இல. 28, புனித மைக்கல் வீதி, கொழும்பு 03. முகவரிக்கு அல்லது consultationShpucsl.gov.lk என்ற மின்னஞ்சல் அல்லது தொலைநகல் (011) 239 2641 ஊடாக சமர்ப்பிக்கலாம். www.facebook.com/pucsl முகநூல் ஊடாகவும் சமர்ப்பிக்க முடியும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கும் விளக்கங்களுக்கும் ஹசங்க கம்புருகமுவை (011) 2392607/8 என்ற தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment