(எம்.மனோசித்ரா)
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அதனை எந்தெந்த அதிகாரங்களுடன் எவ்வாறு அமுல்படுத்துவார் என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை. இந்த விடயத்தில் நழுவல் பாங்கிலேயே அவர் செயற்பட்டிருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நான் அறிந்த வகையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவேன் என்றுதான் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்திருக்கின்றார். மாறாக முழுமையாக எனக்கூறவில்லை. என்னென்ன அதிகாரங்களுடன் அவர் 13 ஐ அமுல்படுத்துவார் என எவராவது கேள்வியெழுப்பியிருந்தால் அவரது உண்மையான நிலைப்பாட்டை அறிந்திருக்க முடியும்.
அரசியலுக்காக அவர்கள் இதைப்பற்றிப் பேசுகின்றனர். எனவே நாம் அது தொடர்பில் பேசத் தேவையில்லை என்பதே எனது நிலைப்பாடு. 13ஆவது திருத்தம் எமது அரசியல் யாப்பிலுள்ள ஒன்றாகும். எனவே யார் ஆட்சிக்கு வந்தாலும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இதனை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.
அதனை முழுமையாக அமுல்படுத்தக் கூடிய சந்தர்ப்பம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு கிடைத்தது. ஆனால் அவர்கள் அதனைச் செய்யவில்லை. 1987 இல் எமக்கு அந்த ஒப்பந்தம் கிடைக்கப் பெற்றபோது அனைத்தையும் சேர்த்தே வழங்கினர். தமிழ் தரப்பினரே அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் நழுவ விட்டனர்.
பிரபாகரனுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது. அவர் தனது சுயநல அரசியலுக்காக அதனைத் தூக்கி எறிந்துவிட்டார். தமிழ் தரப்பினர் அதனை முறையாகப் பயன்படுத்தியிருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்றார்.
No comments:
Post a Comment