(எம்.மனோசித்ரா)
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்போது சமூக மற்றும் சுற்றாடல் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அதனையே குறிப்பிட்டிருந்தார். மாறாக பொலிஸ் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என அவர் கூறவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், வடக்கிற்கு ஒரு சட்டமும், தெற்கிற்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது என்றும், முழு நாட்டுக்கும் ஒரே சட்டம் என்ற ரீதியில் தமிழ் மக்களுக்கான நியாயத்தை வழங்க வேண்டும் என்றுதான் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டிருந்தார்.
13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்போது சமூக பொலிஸ் போன்றவற்றை மாகாண சபைகளுக்கு வழங்குவதில் சிக்கல் இல்லை. பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளில் பெரும்பாலானவை மாகாண சபைகளுக்கே வழங்கப்பட்டுள்ளன. உள்ளுராட்சி நிறுவனங்கள் அனைத்தும் கூட மாகாண சபைகளின் கீழேயே உள்ளன. அவர் கூறியதன் அர்த்தமும் இதுவே. அதனை விடுத்து பொலிஸ் அதிகாரம் முற்றாக வழங்கப்படும் என்பதல்ல.
அவ்வாறெனில் தற்போதுள்ளதுடன் சில விடயங்கள் இணையும். அந்த வகையில் சமூக பொலிஸ் மற்றும் சுற்றாடல் பொலிஸ் என்பவற்றை வழங்குவதில் சிக்கல் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். ஆனால் நான் இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரிடம் எதனையும் கேட்கவில்லை. வடக்கு மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். வடக்கு மாணவர்களுக்கும் தெற்கிலுள்ள மாணவர்களைப் போன்றே கல்வி கற்பதற்கு உரிமையுள்ளது.
அதேபோன்று அவர்களது அடிப்படை உரிமைகளை அபிவிருத்தி செய்வதற்கான உரிமையும் இருக்கிறது. அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும். அனைவருக்கும் அரச உத்தியோகத்தை வழங்க முடியாது. ஆனால் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடியும். வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்காமல், ஏற்றுமதி பொருளாதாரத்தை மேம்படுத்தாமல் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடியாது.
எனவே வடக்கு மக்களுக்கும் இலங்கை பிரஜைகள் என்ற ரீதியில் ஏனைய மக்கள் அனுபவிக்கும் சகல வசதிகளையும் அனுபவிப்பதற்கான உரிமை உள்ளது. ஆனால் அவற்றை எமது நாட்டு அரசாங்கங்கள் வழங்கவில்லை. ஐ.தே.க. அரசாங்கமோ, பொதுஜன பெரமுன அரசாங்கமோ அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. எனவே தான் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment