(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கே ஜனாதிபதி சவால் விடுக்கிறார். இவ்வாறான நிலைமை காணப்படுமாகவிருந்தால் உயர் நீதிமன்றம் இருப்பதில் பயனில்லை மூடிவிடுங்கள். ஜனாதிபதியின் கருத்துக்கள் பாரதூரமானது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) ஜனாதிபதியின் உரையை மேற்கோட்காட்டி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, ஜனாதிபதி மிகவும் சூட்சுமமான முறையில் பந்து வீசுகின்றார். இதில் முதாலாவது பந்து வீச்சாக பெண்களை வலுப்படுத்தும் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் கருத்து உள்ளது. சூட்சும ஞானம் இருப்பதால் இதனை தந்திர குணம் என்று குறிப்பிடலாம்.
அடுத்ததாக கொவிட் காலத்தில் முஸ்லிம்களின் இறந்த உடலை புதைப்பது தொடர்பான சர்ச்சை விடயத்தை இரண்டாவது பந்தாக வீசினார். அத்துடன் வாடகை வீடுகள் வரி தொடர்பான விடயத்தை மூன்றாவது பந்தாக வீசினார். இதில் முதலாவது பந்தான நீதிமன்றத்திற்கு சவால் விடுவது உள்ளது. தந்திரமாகவே மற்றைய பந்துகளை வீசியுள்ளார்.
பெண்கள் வலுப்படுத்தல் தொடர்பான விடயத்தில் பாலின மாற்றத்திற்கு அனுமதி வழங்கும் வகையில் சட்டங்கள் வருவது சிக்கலுக்குரியது. உயிரியல் ரீதியிலான பெண்களை பலப்படுத்துவது சரியானது. ஆனால் அந்தப் போர்வையில் பாலின மாற்று வியாபாரத்திற்கு இடமளிப்பதை அனுமதிக்க முடியாது. உயர் நீதிமன்ற தீர்மானத்திற்கு சவால் விடுவது தவறானதே.
அத்துடன், வரிக்கு மேல் வரி அறவிடுவது தவறுதான். என்றாலும் நீதிமன்றத்திற்கு சவால் விடுவது மிகவும் பாரதூரமானதே. அப்படியென்றால் உயர் நீதிமன்றத்தை மூடிவிடுங்கள். அவ்வாறான உயர் நீதிமன்றத்தை வைத்திருப்பதில் பலனில்லை என்றார்.
No comments:
Post a Comment