மூதூர் - இருதயபுரம் பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களினால் இன்று (18) பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், சமூக ஆர்வலர்கள், சமயத் தலைவர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக “மதுவை கொடுத்து குடியை கெடுக்காதே”, “ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே”, “விவசாயிகளின் உழைப்பை மதுவில் கரைக்காதே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தார்கள்.
பின்னர் அங்கிருந்து மூதூர் பிரதேச செயலகம் வரை சென்று, செயலகத்திற்கு முன்னால் எதிர்ப்பில் ஈடுபட்டதுடன் மதகுருமார்கள் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் ஊடகவியலாளர் அடங்கிய ஐந்து பேரைக் கொண்ட குழுவினர் பிரதேச செயலாளரிடம் மகஜிரினை கையளித்து மிக நீண்ட நேரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.
இதனை அடுத்து குறித்த மதுபான விற்பனை நிலையம் தற்காலிகமாக மதுவரித் திணைக்களத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறித்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருதயபுரம் பகுதியில் மக்களுடைய எதிர்ப்புகளையும் மீறி கடந்த வியாழக்கிழமை (13) மதுபான விற்பனை நிலையம் திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment