சமாதான நீதவான்களை நியமித்தல், இடைநிறுத்துதல், இரத்துச் செய்தல் மற்றும் நடத்தைக் கோவை அடங்கிய 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறைச் சட்டத்தின் கீழ் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்ட இரண்டு ஒழுங்கு விதிகளுக்கு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் (18) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.
சமாதான நீதவான்களுக்கிடையே உயர் தரத்திலான தார்மீக மற்றும் ஒழுக்கவியல் நடத்தையை ஊக்குவித்தல் மற்றும் ஊழல் செயல்முறைகளுக்கான வாய்ப்புக்களை இல்லாதொழித்தல் என்பவற்றின் மூலம் வினைத்திறனான நீதி நிருவாகத்தை வலுப்பெறச் செய்தல் இந்த நடத்தைக் கோவையின் குறிக்கோளாகும்.
சமாதான நீதவான்களை நியமிப்பதற்கான முறைமை மற்றும் அவர்களின் தகைமைகள் தொடர்பில் இதுவரை குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என நீதி அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அந்தப் பதவியை முறைகேடாகப் பயன்படுத்தும் போது அந்த நபர்களை சமாதான நீதவான் பதவியிலிருந்து இரத்துச் செய்வதற்கு உரிய முறைமையொன்று காணப்படாமை காரணமாக இந்த ஒழுங்குவிதிகள் வெளிப்பட்டதாக அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இங்கு மேலும் தெரிவித்தார்.
அத்துடன், இந்தப் பதவியின் கௌரவம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையினை பாதுகாக்கும் நோக்கில் சமாதான நீதவான்கள் பின்பற்ற வேண்டிய நடத்தைக் கோவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு மேலதிகமாக, சிவில் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை, வீட்டு வாடகை சட்டத்தை நீக்குதல் சம்பந்தமாக முன்வைக்கப்படவுள்ள சட்டமூலம் மற்றும் குடியிருப்பாளர்களை பாதுகாப்பது தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள சட்டமூலம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தலதா அத்துகோரல, சட்டத்தரணி ரவுப் ஹக்கீம், தயாசிறி ஜயசேகர, இரான் விக்கிரமரத்ன, முதிதா பிரிஸான்தி, தவராஜா கலை அரசன் மற்றும் மஞ்சுளா திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment