நாடெங்கிலும் சேவையில் ஈடுபட்டுள்ள காதி நீதிபதிகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு நீதி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மேல் நீதிமன்ற வலயங்களுக்கு முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தின் பிரகாரம், முஸ்லிம்களின் விவாகப் பிணக்குகளை விசாரித்து தீர்வுகளை வழங்குவதற்கென நீதிச் சேவை ஆணைக்குழுவினால் காதி நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக பதினைந்தாயிரத்துக்கும் குறைவாகவே வழங்கப்பட்டு வருகின்றது.
ஜூரி (நடுவர்) சபை, விவாக பிணக்குகள் சம்பந்தமான கவுன்ஸில் உறுப்பினர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இது பகுதிநேரப் பணியாக இருந்த போதிலும், வாரந்தோறும் இதற்காகப் பல நாட்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் காதி நீதிபதிகளுக்கு இதுகால வரை வழங்கப்பட்டுவரும் கொடுப்பனவு எவ்விதத்திலும் போதுமானதல்ல என்பதனால், காதி நீதிபதிகளுகளுக்கான மாதாந்த கொடுப்பனவை தற்போது வழங்கப்படுகின்ற தொகையை விடவும் மூன்று மடங்குகளாக அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நீதி, சிறைச்சாலை மற்றும் அரசியலமைப்பு மறு சீரமைப்பு அமைச்சுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதற்கமைவாகவே நீதியமைச்சின் செயலாளரால் பிரஸ்தாப காதி நீதிபதிகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவுகள் 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டு, அதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காதி நீதிபதிகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரித்து வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை காதி நீதிபதிகள் அமைப்பின் (Quazi Judges Forum) ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Vidivelli
No comments:
Post a Comment