அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்துவதை விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தலைமையில் அண்மையில் (18) கூடியது.
இந்த நோக்கம் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிற்கும் (கோப்) பொருந்தும் என்பதால், அதன் தலைவர் ரோஹித அபேகுணவர்தனவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொட, கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன, பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் ஜயலத் பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அதற்கமைய, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) மற்றும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) என்பவற்றால் வழங்கப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை தாமதப்படுத்துதல் மற்றும் செயல்படுத்தாமை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கும் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான உரிய பொறிமுறை ஒன்றை தயாரிப்பது பற்றிய பரிந்துரை அடங்கிய வரைபு அறிக்கை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அதன்படி, கோப் மற்றும் கோபா குழுக்களின் பரிந்துரைகளை சம்பந்தப்பட்ட குழுவின் தீர்மானத்தின் படி, சட்டமா அதிபருக்கு முன்வைப்பதற்கு மேலதிகமாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு அல்லது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வேறு நிறுவனத்துக்கும் முன்வைக்கும் அவசியம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், அந்த நிறுவனங்களுக்கும் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு குறிப்பிட்ட கால வரையறை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் இந்தக் குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை மேற்பார்வை செய்வதற்கு விசேட பொறிமுறை மற்றும் நிறுவனம் காணப்படுவதாகவும் அவ்வாறான பொறிமுறை ஒன்று இந்நாட்டிலும் உருவாக்கப்பட வேண்டும் என இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்படும் போது கோப் மற்றும் கோபா குழுக்கள் இரத்தாவதால் அவற்றின் பணிகளுக்குத் தடை ஏற்படுவதை தவிர்ப்பதன் அவசியம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
அதற்கமைய, கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்படும் போது இரத்தாகாத குழுக்களின் பட்டியலில் இந்த இரண்டு குழுக்களை சேர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
வீண்விரயம் மற்றும் ஊழலை ஒழித்து அரச வளங்களை சரியாக முகாமைத்துவம் செய்வதற்கு இந்தக் குழுக்களின் பரிந்துரைகளுக்கு அமைய சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது எனவும் அதற்கமைய, இது தொடர்பில் எதிர்வரும் காலத்தில் சபாநாயகரை சந்தித்துக் கலந்துரையாடுவதாகவும் உப குழுவின் தலைவர் தெரிவித்தார்.
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு மற்றும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு என்பன பல வருடங்களாக அரச நிறுவங்களுக்கு வழங்கியுள்ள சில பரிந்துரைகள் முறையாக செயற்படுத்தப்படாமை தொடர்பான சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அலகியவண்ணவின் தலைமையிலான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் இந்த உப குழு நியமிக்கப்பட்டது.
அதற்கமைய, நிலையியற் கட்டளைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அது சம்பந்தமான பரிந்துரை அடங்கிய இறுதி அறிக்கையை அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு மற்றும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு ஆகியன இணைந்து பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் உப குழுவின் தலைவர் கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
No comments:
Post a Comment