குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் டொக்ஸிக் ஷொக் சிண்ட்ரோம் (Group A Streptococcal Toxic Shock Syndrome (STSS) எனப்படும் சதையை உண்ணும் அரிதான பக்டீரியா ஜப்பானில் பரவி வருகிறது.
இந்த பக்டீரியா தொற்றை கவனிக்காமல் விட்டால், இரண்டு நாட்களில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த பக்டீரியாவினால் இதுவரையிலும் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் எனும் பக்டீரியா 1999 இல் ஜப்பானில் கண்டறியப்பட்டது.
இந்த வகை தொற்று பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கி பழகுபவர்களுக்கும், அவர்களுடன் உணவு மற்றும் பானங்களை பகிர்ந்து உண்பவர்களுக்கும் எளிதில் பாதிப்பு ஏற்படுவதாக ஜப்பான் தொற்று நோயியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த வகை பக்டீரியா தொற்று பொதுவாக வீக்கம் மற்றும் தொண்டை வலியை ஏற்படுத்துகிறது. மூட்டு வலி, வீக்கம், காய்ச்சல், குறைந்த இரத்த அழுத்தம், சுவாசப் பிரச்சினைகள், உறுப்பு செயலிழப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது ஜப்பானில் பக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000 ஐ நெருங்கியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட அதிகமென அந்நாட்டு தேசிய தொற்று நோயியல் மையம் தெரிவித்துள்ளது.
சதையை உண்ணும் பக்டீரியா குறித்து டோக்கியோ மருத்துவ பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் பேராசிரியர் கென்கிகுச்சி கூறுகையில், இந்த பக்டீரியா தொற்றுக்குள்ளாகும் நபர்களில் பெரும்பாலானோரின் இறப்பு 48 மணிநேரத்துக்குள் நிகழ்கிறது. நோயாளிகளுக்கு முதலில் காலில் வீக்கம் காணப்படுகிறது. சில மணி நேரங்களில் அது முழங்கால்வரை விரிவடைகிறது. 48 மணி நேரத்துக்குள் அவர்கள் இறக்கின்றனர்.
ஜப்பானில் தற்போதைய தொற்று நோய் விகிதப்படி, இந்த பக்டீரியாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 2,500 ஐ எட்டக்கூடும். அதிர்ச்சியூட்டும் வகையில் அவர்களில் 30 சதவீதம் பேர் இறக்க வாய்ப்புள்ளது” என்றார்.
இந்நிலையில், இந்த பற்றீரியா நோய்த்தொற்று தொடர்பில் பொது மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இலங்கையின் தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளதாவது, STSS என்பது ஒரு சிகிச்சையளிக்கக் கூடிய பற்றீரியா தொற்று என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்வது அவசியம்.
ஸ்ட்ரெப்டோகாக்கஸ் டோக்சிக் ஷாக் சிண்ட்ரோம் (Streptococcal toxic shock syndrome) ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பற்றீரியாவின் சில விகாரங்களால் ஏற்படுகிறது. நோய் தொற்றுக்குள்ளாகியவர் உரிய நேரத்தில் சரியான சிகிச்சை இல்லை என்றால் உயிரிழப்பை ஏற்படுத்தும்.
காய்ச்சல், தசை வலி, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை இதன் முதற்கட்ட அறிகுறிகளாகும். இந்த பாதிப்பு ஏற்பட்ட 24 முதல் 48 மணி நேரத்திற்குள் குறைந்த இரத்த அழுத்தம், உறுப்பு செயலிழப்பு, இதயத் துடிப்பு அதிகரிப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும்.
பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு விகிதம் 30 சதவிகிதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
உலகளாவிய சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதால், இலங்கையின் சுகாதார அதிகாரிகள் விழிப்புடன் இருப்பார்கள் என்றும், வெளிவரும் எந்தவொரு சுகாதார அச்சுறுத்தல்களுக்கும் பதிலளிக்கத் தயாராக இருக்கிறார்கள்.
பொதுமக்களுக்கான முக்கிய செய்தி என்னவென்றால் அச்சம் கொள்ள தேவையில்லை, ஆனால் எஸ்டிஎஸ்எஸ் உடன் தொடர்புடைய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்," என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment