(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அண்மைக்கால மதிப்பீட்டு அறிக்கையை பாராளுமன்றத்துக்கு முழுமையாக சமர்ப்பித்து அது தொடர்பில் விவாதிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அண்மைக்கால மதிப்பீட்டு தொடர்பில் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
அதன் அறிக்கையின் பிரகாரம் நாட்டில் 60 வீதத்துக்கும் அதிகமானவர்களின் வருமானம் குறைந்துள்ளதுடன் 92 வீதமானவர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது.
அதேபோன்று 37 வீதமாக இருந்த வறுமை நிலை இந்த மாத இறுதியாகும்போது அது 40 வீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
பாராளுமன்றத்தில் நாங்கள் கோட் அணிந்து குளிரூட்டப்பட்ட அறையின் வாழ்க்கைச் செலவின் தன்மையும் இலட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கைச் செலவின் தன்மைக்குமிடையில் இருந்துவரும் வித்தியாசம் விசாலமானது. வறுமை நிலை பாரியளவில் அதிகரித்து வருகிறது.
அதனால் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் மதிப்பீட்டு அறிக்கையை முழுமையாக சபைக்கு சமர்ப்பித்து அது தொடர்பில் விவாதத்துக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.அதற்காக ஆளும் எதிர்க்கட்சி அனைவரும் அதற்காக ஆதரவளிக்க முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment