(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பிரதி சபாநாயகர் தலைமையிலான குழு முன்வைத்த பரிந்துரைகளை செயற்படுத்த முடியாது என்றால் அவர் தலைமையில் ஏன் பிரத்தியேக குழு ஒன்றை நியமித்தீர்கள் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார்.
உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் கட்டுப்பட்டில்லை. நீங்கள் நினைத்துக் கொள்ளும் விடயங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதிலளித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற அமர்வின்போது ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல, இராஜாங்க அமைச்சருக்கும் எதிரணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற மோதல் (டயனா கமகே- சுஜீத் பெரேரா, ரோஹன பண்டார மோதல்) தொடர்பில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவினர் அறிக்கை சமர்ப்பித்தார்கள். அதில் தண்டனை வழங்கல் வெவ்வேறாக குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் அதனை நீங்கள் (சபாநாயகரை நோக்கி) பொருட்படுத்தவில்லை. பாராளுமன்ற சிறப்புரிமை குழு முன்வைத்த பரிந்துரைகளை ஒருதலை பட்சமாக செயற்படுத்தினீர்கள் என்றார்.
இதன்போது உரையாற்றிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அந்த விவகாரம் தொடர்பில் தான் சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டது அவர் ஆலோசனை வழங்கியுள்ளார் என்றார்.
மீண்டும் ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல, சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற வேண்டிய தேவை உங்களுக்கு இல்லை. பிரதி சபாநாயகர் முன்வைத்த பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றால் ஏன் அவர் தலைமையில் விசேட குழுவை நியமித்தீர்கள் என்றார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் கட்டுப்பட்டில்லை என்றார்.
மீண்டும் எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல, பிரதி சபாநாயகர் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் அவர் முன்வைத்த பரிந்துரைகளை செயற்படுத்தவில்லை என்று குறிப்பிடுங்கள்.
மீண்டும் உரையாற்றிய சபாநாயகர் நீங்கள் ( லக்ஷ்மன் கிரியெல்லவை நோக்கி ) நீங்கள் ஏதாவது நினைத்துக் கொள்ளுங்கள் உங்களின் நிலைப்பாட்டுக்கு பதிலளிக்க நான் கட்டுப்பட்டில்லை என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா எழுப்பிய கேள்விகளுக்கு நீங்கள் அளித்த பதிலை ஏற்றுக் கொள்ள முடியாது. 224 உறுப்பினர்களின் உரிமை மற்றும் சிறப்புரிமைகளுக்கு சபாநாயகரே பொறுப்புக் கூற வேண்டும். ஆகவே பொறுப்புக்கூற முடியாது என்று குறிப்பிட வேண்டாம். சிரேஷ்ட அரசியல்வாதி என்ற அடிப்படையில் பொறுப்புடன் பதிலளியுங்கள் என்றார்.
No comments:
Post a Comment