(எம்.வை.எம்.சியாம்)
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு நிபுணத்துவம் மற்றும் அனுபவமுள்ள ஒருவரே தேவைப்படுகிறார். நாட்டின் எதிர்கால பொருளாதார வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் பொருத்தமான தலைவர் ஒருவருக்கே தமது கட்சி ஆதரவு அளிக்கும் என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் பலக்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டணியாக ஏகமானதாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளும் ஒருவரே எமது கட்சியின் ஜனாதிபதி பொது வேட்பாளராக தெரிவு செய்யபடுவார்.
அத்துடன் பொதுஜன பெரமுன மேற்கொள்ளும் தீர்மானம் பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன். காரணம் வீழ்ந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுத்துச் செல்லும் ஒருவரே தற்போது தேவைப்படுகிறார்.
எதிர்காலத்தில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் நபர் தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுத்துச் செல்லப்படும் வேலைத்திட்டங்களை இல்லாமல் செய்து அதற்கு இடையூறு விளைவிக்காமல் இருக்க வேண்டும்.
குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தினூடான உடன்படிக்கைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கொடுக்கல் வாங்கல் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். அவ்வாறு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் ஒருவரலாலும் இந்த நாட்டை முன்னோக்கிக்கொண்டு செல்ல முடியாமல் போகும்.
எனவே நிபுணத்துவம் மிக்க அனுபவமுள்ள குறிப்பாக சர்வதேச நாடுகளுடன் நல்லுறவை பேணவும் அந்த நாடுகளுடன் நீண்டகால கொடுக்கல் வாங்களில் ஈடுபட்டு நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒருவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறான ஒருவருக்கே நாட்டு மக்களும் ஆதரவு வழங்க வேண்டும்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் பிரதான கட்சி என்ற வகையில் எமது கட்சியின் தலைவர் சிறந்த தீர்மானமொன்றை எடுப்பார். பொருத்தமான ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பார். அவருக்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவோம் என்றார்.
No comments:
Post a Comment