முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டியன் குளம் பகுதியில் தனியார் வகுப்பு நடத்தி வரும் ஆசிரியரொருவர் ஆண் மாணவர்களுடன் நீண்ட காலமாக ஓரின பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பாண்டியன் குளம் பிரதேசத்தில் கணித பாடத்தில் சிறப்பு தேர்ச்சி பெற்ற ஆசிரியர் மாணவர்கள் மத்தியில் கணித பாடம் கற்பிப்பதில் சிறப்பான பெயர் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் இவர் மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையம் வைத்தும் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தியும் கற்பித்து வந்துள்ள நிலையில் கல்வி கற்று வரும் ஆண் மாணவர்களை தன் வலைக்குள் வீழ்த்தி ஓரின பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
குறித்த தனியார் ஆசிரியரால் 6 ஆண் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஒரு ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டபோதும், பிரதேச செயலத்தில் முறையிடப்பட்டபோதும் உரிய நேரத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் திங்கட்கிழமை (13) குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவன் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவன் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தெரியவந்துள்ளது.
இதனால் குறித்த தனியார் ஆசிரியர் நெட்டாங்கண்டல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளதுடன் இது தொடர்பிலான சட்ட வைத்திய பரிசோதனை மற்றும் முதற்கட்ட விசாரணைகள் என்பன தற்போது இடம்பெற்று வருவதாக அறியக்கிடைத்துள்ளது.
இதேவேளை பாண்டியன் குளத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயர்தர மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய குற்றச்சாட்டில் கல்விசார் திணைக்களத்தினால் விசாரணை நடத்தப்பட்டு அயல் பாடசாலை ஒன்றிற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் மாணவர்கள் மத்தியில் பரவலாக இடம்பெற்று வருகின்றமையும் பொலிஸார் மற்றும் திணைக்களம் சார் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்கத்தவறியமை பலர் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்குடியிருப்பு விசேட நிருபர்
No comments:
Post a Comment