நேற்று அவர்கள்
மீண்டும் கூடினர்
வெள்ளை நிற அங்கியணிந்த
வேங்கைகள் போலும்
அவர்கள் தம்மைப் பாவனை செய்தனர்
சூறாவளியொன்று
சூல் கொள்ளப்போகுதென்று
உலகமே அங்கு உற்றுப் பார்த்தது
பருக நீரற்ற மக்கள் கதி குறித்து
பழரசம் அருந்தியபடி அவர்கள்
பேசத் தொடங்கினர்
வெளிச்சம் மிகுந்த விசால அறையில்
இருண்டு கிடக்கும்
இடம் பற்றிப் பேசினர்
வாயுப் படுகைகளின் சுல்தான்கள்
வாயுவின்றி மரணித்த
குழந்தைகளின் தொகையைக்
குறிப்புக் கொப்பியில் எழுதிக் கொண்டனர்
குவிந்து விரியும் உதடுகளூடே
குத்து வாள்கள் வந்து விழுந்தன
குறுவாள்கள் குதித்து வந்தன
உடைந்த வாள்களும் உதிர்ந்து விழுந்தன
செத்த மீனின் செதிலறுக்க மாட்டாத
மொத்த வாள்களும்
மொட்டை வாள்கள்
கம்பும் உடையாமல்
பாம்பும் சாகாமல்
மாய்ந்து மாய்ந்து அடித்து ஓய்ந்தனர்
பெரும்புயலும் பேரிரைச்சலும்
எழும்புமென எதிர்பார்த்திருந்தவர்கள்
'புஸ்' வெடியொன்றின்
புகையைக் கண்டனர்
புகையை மட்டும்!
அஷ்ரஃப் சிஹாப்தீன்
No comments:
Post a Comment