அறபிகளின் மாநாடு - News View

About Us

About Us

Breaking

Sunday, November 12, 2023

அறபிகளின் மாநாடு

நேற்று அவர்கள்
மீண்டும் கூடினர்

வெள்ளை நிற அங்கியணிந்த
வேங்கைகள் போலும்
அவர்கள் தம்மைப் பாவனை செய்தனர்

சூறாவளியொன்று
சூல் கொள்ளப்போகுதென்று
உலகமே அங்கு உற்றுப் பார்த்தது

பருக நீரற்ற மக்கள் கதி குறித்து
பழரசம் அருந்தியபடி அவர்கள்
பேசத் தொடங்கினர்

வெளிச்சம் மிகுந்த விசால அறையில்
இருண்டு கிடக்கும்
இடம் பற்றிப் பேசினர்

வாயுப் படுகைகளின் சுல்தான்கள்
வாயுவின்றி மரணித்த
குழந்தைகளின் தொகையைக்
குறிப்புக் கொப்பியில் எழுதிக் கொண்டனர்

குவிந்து விரியும் உதடுகளூடே
குத்து வாள்கள் வந்து விழுந்தன
குறுவாள்கள் குதித்து வந்தன
உடைந்த வாள்களும் உதிர்ந்து விழுந்தன

செத்த மீனின் செதிலறுக்க மாட்டாத
மொத்த வாள்களும்
மொட்டை வாள்கள்

கம்பும் உடையாமல்
பாம்பும் சாகாமல்
மாய்ந்து மாய்ந்து அடித்து ஓய்ந்தனர்

பெரும்புயலும் பேரிரைச்சலும்
எழும்புமென எதிர்பார்த்திருந்தவர்கள்
'புஸ்' வெடியொன்றின்
புகையைக் கண்டனர்
புகையை மட்டும்!

அஷ்ரஃப் சிஹாப்தீன்

No comments:

Post a Comment