வரவு செலவுத் திட்டத்தை இன்று சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகிறார் ஜனாதிபதி : பொதுமக்கள் கலரிக்கு பூட்டு : சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒட்டு மொத்த பாராளுமன்ற கட்டடம் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 12, 2023

வரவு செலவுத் திட்டத்தை இன்று சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகிறார் ஜனாதிபதி : பொதுமக்கள் கலரிக்கு பூட்டு : சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒட்டு மொத்த பாராளுமன்ற கட்டடம்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று திங்கட்கிழமை (13) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அந்த வகையில், வரவு செலவுத் திட்ட உரை இன்று நண்பகல் 12 மணிக்கு நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் இது இரண்டாவது வரவு செலவுத் திட்டமாகும்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, வசதி குறைந்த மக்களுக்கு நிவாரண திட்டங்கள், தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் வசதிகள் என பல முன்மொழிவுகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

பாதுகாப்பு நடவடிக்கை
இன்றையதினம் ஜனாதிபதியினால் வரவு செலவுத் திட்டம் சம்ர்ப்பிக்கப்படுவதை முன்னிட்டு கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன. கடந்த 10ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வு அறைகள், உடை அலுமாரிகள் உட்பட ஒட்டு மொத்த பாராளுமன்றக் கட்டிடமும் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பொதுமக்கள் கலரி
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் இன்றையதினம் பொதுமக்கள் கலரி விசேட பகுதியினர்களுக்கு மாத்திரம் திறந்திருக்கும். சபாநாயகர் கலரி தூதுவர்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு இன்றைய தினம் அனுமதி இல்லை.

அத்துடன் இன்றையதினம் பாராளுமன்ற வாகனத் தரிப்பிடம் மூடப்படுவதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகை தருகின்ற வாகனங்கள் உரிய வாகனத் தரிப்பிடங்களுக்கு அனுப்பப்பட இருக்கின்றன.

உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வருகை தரும்போது சாரதி ஒருவரை அழைத்து வருவதற்கு இயன்றளவு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் இன்றையதினம் போக்குவரத்துப் பொலிஸார் மற்றும் அண்மைய பொலிஸ் நிலையம் மூலம் விசேட போக்குவரத்துத் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரசாங்கத்துக்கு வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வரி அதிகரிப்பும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வரவு செலவுத் திட்ட விவாதம் நாளை செவ்வாய்க்கிழமை 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 7 நாட்கள் இடம்பெறவுள்ளது.

அத்துடன், வரவு செலவுத்திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து, குழுநிலை விவாதம் எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை முதல் டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 19 நாட்கள் இடம்பெறவுள்ளது.

அதற்கமைய, 2024 ஆம் நியதியாண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் வியாழக்கிழமை (05) பாராளுமன்றத்தில் சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தினால் சமர்ப்பிக்கப்பட்டது.

சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான 3 இலட்சத்து 86084 கோடியே 6788000 ரூபா ஒதுக்கீட்டில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்காக மொத்தமாக 56445 கோடியே 8500000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளில் ஜனாதிபதிக்கான செலவீனம் மற்றும் அவரின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளுக்கென மொத்தமாக 123711 கோடியே 6115000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமரின் செலவீனம் மற்றும் அவரின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கென 88726 கோடியே 5000000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் ஜனாதிபதிக்கான செலவீனமாக 660 கோடியே 1150000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமரின் செலவீனத்துக்காக 115 கோடியே 5000000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 88611 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இதில் வடக்கு மாகாணத்திற்கு 451 கோடியே 5000000 ரூபாவும் கிழக்கு மாகாணத்திற்கு 522 கோடியே 5000000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான 3 இலட்சத்து 86084 கோடியே 6788000 ரூபா ஒதுக்கீட்டில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்காக 1060 கோடி ரூபாவும் இதில் பௌத்தமதத்திற்காக 166 கோடி ரூபாவும் இந்து மதத்திற்காக 28 கோடியே 30 இலட்சம் ரூபாவும் கிறிஸ்தவ மதத்திற்காக 21 கோடி ரூபாவும் இஸ்லாம் மதத்திற்காக 18 கோடி ரூபாவும் மிகுதி ஏனைய திணைக்களங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு, மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சுக்காக 72343 கோடியே 1495000 ரூபாவும் பாதுகாப்பது அமைச்சுக்காக 42372 கோடியே 5000000ரூபாவும் வெகுசன ஊடக அமைச்சுக்காக 255 கோடி ரூபாவும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்காக 412 கோடியே 51000000 ரூபாவும் சுகாதார அமைச்சுக்காக 41028 கோடியே 9998000 ரூபாவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்காக 1961 கோடியே 2025000 ரூபாவும் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சுக்காக 231கோடியே 9000000 ரூபாவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்காக 4036 கோடியே 84000000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று கமத்தொழில் அமைச்சுக்காக 10042 கோடியே 3280000 ரூபாவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்காக 4298 கோடியே 3000000 ரூபாவும் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சுக்காக 1917 கோடியே 4730000 ரூபாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்காக 4245 கோடி ரூபாவும் கல்வி அமைச்சுக்காக 23705 கோடி ரூபாவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்காக 1000 கோடி ரூபாவும் கைத்தொழில் அமைச்சுக்காக 910 கோடியே 8300000 ரூபாவும் கடற்றொழில் அமைச்சுக்காக 700 கோடி ரூபாவும் சுற்றாடல் அமைச்சுக்காக 213 கோடி ரூபாவும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சுக்காக 871 கோடியே 3000000 ரூபாவும் நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சுக்காக 726 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்காக 7453 கோடியே 400000 ரூபாவும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானச்சேவைகள் அமைச்சுக்காக 707 கோடியே 5000000 ரூபாவும் தொழில் நுட்பம் மற்றும் முதலீட்டு அமைச்சுக்காக 542 கோடியே 6800000 ரூபாவும் முதலீட்டு மேம்பாடு அமைச்சுக்காக 339 கோடியே 7670000 ரூபாவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்காக 14073 கோடியே 3500000 ரூபாவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்காக 689 கோடியே 8000000 ரூபாவும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சுக்காக 1050 கோடி ரூபாவும் நீர்ப்பாசன அமைச்சுக்காக 8395 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment