கிரிக்கெட் சபையின் மோசடியாளர்களை பாதுகாக்க முயற்சித்தால் கடவுள் துணை புரியட்டும் : சட்டமா அதிபர் மீது நம்பிக்கையில்லை என்கிறார் விளையாட்டுத்துறை அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Friday, November 10, 2023

கிரிக்கெட் சபையின் மோசடியாளர்களை பாதுகாக்க முயற்சித்தால் கடவுள் துணை புரியட்டும் : சட்டமா அதிபர் மீது நம்பிக்கையில்லை என்கிறார் விளையாட்டுத்துறை அமைச்சர்

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

கிரிக்கெட் இடைக்கால குழுவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை (13) உயர் நீதிமன்றத்தை நாடுவேன். கிரிக்கெட் விவகாரத்தில் சட்டமா அதிபர் மீது நம்பிக்கையில்லை. ஆகவே எனது தனிப்பட்ட சட்டத்தரணியை முன்னிலைப்படுத்துவேன். கிரிக்கெட் சபையின் மோசடியாளர்களை பாதுகாக்க முயற்சித்தால் இந்த நாட்டுக்கு கடவுள் துணை புரியட்டும் என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற அமர்வின் போது இருபத்தேழு கீழ் இரண்டுக்கமைய எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, விளையாட்டுத்துறை சட்டத்துக்கமைய ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை உட்பட அதனுடன் ஒன்றிணைந்த நிறுவனங்கள் செயற்படுகின்றன. ஆனால் கிரிக்கெட் சபையின் தற்போதைய நிர்வாகம் சட்டத்துக்கும், பொதுக் கொள்கைக்கும் அப்பாற்பட்டு செயற்படுகிறது. பல ஊழல் மோசடிகளுக்கும் துணை செல்கிறது.

கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடி தொடர்பில் ஆராய 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நிதி விவகாரங்கள் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு செய்யுமாறு கணக்காளர் நாயகத்தின் அலுவலகத்துக்கு நேரடியாக சென்று அவரிடம் வலியுறுத்தினேன்.

'தான் பாராளுமன்றத்துக்கு கட்டுப்பட்டு செயற்படுவதாகவும், 2018 முதல் 2023 வரையான காலப்பகுதியில் தடயவியல் கணக்காய்வு செய்ய முடியாது. அதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்க வேண்டுமாயின் ஒரு வருடத்தின் நிதி நிலைமைகளை கணக்காய்வு செய்யலாம்' என்றார்.

இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு நிதி நிலைமை கணக்காய்வு செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கணக்காளர் நாயகம் 2023.09.11 ஆம் திகதி சமர்ப்பித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கிரிக்கெட் சபையின் ஊழல் நிர்வாக அதிகாரிகளை புறக்கணித்து, நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்ட அர்ஜூன ரணதுங்க தலைமையில் இடைக்கால குழுவை நியமித்தேன்.

கிரிக்கெட் துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு சட்டத்திருத்தம் ஊடாக தீர்வு காண முடியும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது சட்டவரைபு தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில்தான் இடைக்கால குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவுக்கு எதிராக ஊழல் மோசடியாளர்கள் நீதிமன்றத்தை நாடி இடைக்கால தடையுத்தரவை பெற்றுக் கொண்டார்கள். இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு முன்னிலையாகுமாறு சட்டமா அதிபரிடம் நான் பலமுறை வலியுறுத்தினேன். ஆனால் அவர் அதனை பொருட்படுத்தவில்லை. நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு எத்தன்மையிலானது என்பதை நான் பகிரங்கமாக எடுத்துரைத்துள்ளேன்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு தடை விதிப்பதாக கிரிக்கெட் சபையின் மோசடியாளர்கள் தற்போது குறிப்பிடுகிறார்கள். நாடு என்ற ரீதியில் அந்த நிலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

ஊழல் மிக்க கிரிக்கெட் சபையின் தலைவர் மற்றும் நிர்வாகிகளை பதவி நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்பி வைத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கிரிக்கெட் சபையின் ஊழல்வாதிகள் ஒன்றிணைந்து இலங்கை கிரிக்கெட் சபையை தடை செய்ய நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கிரிக்கெட் சபைக்கு இணக்கமானவரின் அலுவலகம் உள்ளது.

கிரிக்கெட் சபையின் மோசடி செய்யப்பட்ட நிதி செல்லாத இடம் எங்கும் இல்லை, விலைக்கு வாங்காத தரப்பினர் எவரும் இல்லை.

கிரிக்கெட் இடைக்கால குழுவுக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை தொடர்ந்து ஊழல்வாதிகள் என்று முத்திரை பதிக்கப்பட்ட தரப்பினர் மீண்டும் அதிகாரத்துக்கு வந்துள்ளார்கள். கிரிக்கெட் சபையின் கணக்கில் உள்ள 2 மில்லியன் டொலரை மீளப் பெற முயற்சிக்கிறார்கள்.

இவர்களின் மோசடிகளுக்கு இடமளிக்க முடியாது. விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்தை நாடுவேன்.

கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடியாளர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகள் குறித்து சட்டமா அதிபர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே கிரிக்கெட் விவகாரத்தில் சட்டமா அதிபர் மீது நம்பிக்கையில்லை.

ஆகவே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு எனது தனிப்பட்ட சட்டத்தரணியை முன்னிலைப்படுத்துவேன். கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடியாளர்களை தொடர்ந்து பாதுகாக்க ஒரு தரப்பினர் முயற்சித்தால் இந்த நாட்டுக்கு கடவுள் துணை புரிய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment