கொழும்பின் பல பகுதிகளில் ஐஎஸ் அமைப்பு தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து கொழும்பு கோட்டை நீதவானிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தினமின செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றம், துறைமுக நகரம், கங்காரம ஆகிய உட்பட கொழும்பின் பல பகுதிகளில் தாக்குதலை மேற்கொள்ள ஐஎஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக தினமின செய்தி வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வியாழக்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்கவிடம் இது குறித்த விடயங்களை சமர்ப்பித்துள்ளனர்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் ஐஎஸ் அமைப்பின் திட்டம் குறித்து தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக நீதவானிற்கு தெரிவித்துள்ளனர்.
இலங்கை சிறைகளில் பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டுகளிற்காக ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஊடாக இந்த தகவல் கிடைத்துள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பல்லேகல்ல சிறையில் உள்ள ஒருவர் இந்த விடயம் குறித்து அறிந்து தனேகும்பர பொலிஸ் நிலையத்தில் கடிதமொன்றை வீசிச் சென்றுள்ளார் என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத தாக்குதல் குறித்து சிறையில் உள்ளவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருந்தவேளை அதனை செவிமடுத்த ஒருவரை அவர்கள் தாக்கியுள்ளனர், அவர்கள் தொலைபேசி மூலம் திட்டமிட்டுள்ளனர் என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட நபர் பயங்கரவாதிகளின் திட்டங்கள் குறித்த விபரங்களுடன் கடிதங்களை வெளியே எறிந்துள்ளார். அந்தக் கடிதத்தில் சிறையில் திட்டமிடல்களில் ஈடுபட்டவர்கள் அவர்களின் தொலைபேசி இலக்கங்கள் போன்றவை காணப்பட்டுள்ளன எனவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கடிதம் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என தெரிவித்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் சந்தேகநபர்களை இது தொடர்பில் விசாரணை செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் என தினமின தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment