வங்குரோத்து நிலையிலும் மருந்து கொள்வனவில் அரச நிதி மோசடி செய்யப்படுவதை முதலில் இல்லாதொழிக்க வேண்டும் - விஜித ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 7, 2023

வங்குரோத்து நிலையிலும் மருந்து கொள்வனவில் அரச நிதி மோசடி செய்யப்படுவதை முதலில் இல்லாதொழிக்க வேண்டும் - விஜித ஹேரத்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படலாம். ஆனால் சுகாதார அமைச்சர் தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள நம்பிக்கையின்மை தீவிரடைந்துள்ளது. வங்குரோத்து நிலையிலும் மருந்து கொள்வனவில் அரச நிதி மோசடி செய்யப்படுவதை முதலில் இல்லாதொழிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் சுகாதார கட்டமைப்பில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்பதை காண்பிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால் நடைமுறையில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கும், சமூக கட்டமைப்பின் தன்மைக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

சுகாதாரத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு சுகாதார அமைச்சர் மாத்திரமல்ல, அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும்.

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடையலாம். ஆனால் சுகாதார அமைச்சர் மீதான மக்களின் நம்பிக்கையின்மை நீக்கப்படவில்லை.

அரசாங்கத்தின் மீதும் மக்களுக்கு சிறிதளவும் நம்பிக்கையில்லை. தரமற்ற மருந்து கொள்வனவினால் முழு சுகாதார கட்டமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தவறான கொள்கையினால் சுகாதார அமைச்சர் இன்று பாதிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சினால் மாத்திரம் நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியாது. வங்குரோத்து நிலையால் நாட்டின் சகல துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் சுகாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள். வங்குரோத்து நிலைக்கு மத்தியிலும் மருந்து கொள்வனவு ஊடாக நிதி மோசடி செய்யப்படுகிறது.

அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா நீண்ட காலம் சுகாதார அமைச்சராக பதவி வகித்தார். அவர் பதவி வகித்தபோது சுகாதார சேவையாளர்கள் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கடும் நெருக்கடியான சூழ்நிலையிலும் நிமல் சிறிபாலடி சில்வா சுகாதார அமைச்சினையே கோருவார். அதிலும் ஒரு இரகசியம் இருந்தது.

இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மைத்திரிபால சிறிசேனவை சுகாதார அமைச்சராக நியமித்தார்.

மருந்து மாபியாக்கள் அரச அனுசரனையுடன் செயற்படுகின்றன. ஊழல் மோசடியை இல்லாதொழிக்க அரச தலைவர்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மாறாக ஊழல் மாபியாக்களுக்கு சார்பாகவே செயற்பட்டுள்ளார்கள். ஆகவே சுகாதார கட்டமைப்பை வினைத்திறனாக்க மருந்து கொள்வனவில் இடம்பெறும் மோசடியை முதலில் ஒழிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment