(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையானை விடுதலை செய்ய நீதிமன்றத்துக்குள் சூழ்ச்சி இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குறிப்பிட்ட பாரதூரமான குற்றச்சாட்டால் நீதிபதிகள், சட்டமா அதிபர் பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். நீதிமன்றம் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் கருத்துரைப்பதை மக்கள் பிரதிநிதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (8) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நீதிமன்ற கட்டமைப்பு மற்றும் நீதிபதிகள் தொடர்பில் பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையானை விடுதலை செய்ய நீதிமன்றத்துக்குள் பாரிய சூழ்ச்சி இடம்பெற்றுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர் நவாஸ், உயர் நீதிமன்ற நீதியரசர் வெங்கப்புலி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தேவிகா அபேரத்ன ஆகியோர் இவ்விடயத்தில் தொடர்புப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து நீதிமன்ற கட்டமைப்பு மீதான மக்களின் நம்பிக்கை பாரதூரமான அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பிள்ளையான் உட்பட ஆறு பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஆறு பேரில் ஒருவர் மேன்முறையீடு செய்தார்.
பிள்ளையான் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உட்பட மாதவ தென்னகோண் என்பவரும் தொடர்புப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
பிள்ளையானின் வழக்கு தொடர்பில் அப்போதைய சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்ற சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரி மாதவ தென்னகோணிடம்' வழங்கப்பட்டுள்ள வாக்குமூலத்தை தவிர்த்து வேறு சாட்சியங்கள் ஏதும் உண்டா என்று வினவியுள்ளார்.
அதற்கு மாதவ தென்னகோன் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான பின்னணியில் வாக்குமூலம் சாட்சியங்கள் இரத்து செய்யப்பட்டதன் பின்னர் அந்த வழக்கை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது சாத்தியமற்றது.
ஆகவே இந்த விடயத்தில் எவ்வித முறைகேடுகளும் இடம்பெறவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தின் கருத்தால் நீதிபதிகளும், சட்டமா அதிபர் திணைக்கம் மற்றும் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஆகியோர் அபகீர்த்திக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
சனல் 4 வெளியிடாத பல தகவல்கள் தன்னிடம் உள்ளதாக சாணக்கியன் இராசமாணிக்கம் குறிப்பிட்டுள்ளார். ஆகவே சாட்சியங்கள் காணப்படுமாயின் அவர் குற்றப் புலனாய்வு பிரிவிடம் அவற்றை சமர்ப்பித்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நீதிமன்றத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் கருத்துரைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். நீதிபதிகளை அவமதித்து எதை சாதிக்க போகிறார்கள் என்பது அறியாததொரு விடயமாகவுள்ளது என்றார்.
No comments:
Post a Comment